பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் ஆர்எஸ்எஸ் உறுப்பினரா? உண்மை என்ன?
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை தாக்கியவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினரா? உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கடந்த 16ஆம் தேதிதான் சைஃப் அலிகான் கத்தியால் தாக்கப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்தான் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது மனைவி கரீனா கபூர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு கடந்த 16ஆம் தேதி அதிகாலை வந்த மர்ம நபர் திருட முயற்சித்த போது அவரை சைஃப் அலிகான் தடுத்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மர்ம நபர் சைஃப்பை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து சைஃப்பை உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்திய நபர் சைஃப் அலிகானின் வீட்டில் இருந்து தப்பியோடிய நிலையில் அவரை பிடிக்க 20 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய போது 5ஆவது தளத்தின் மாடியில் இருந்து கீழே இறங்கும் அவருடைய முகம் சிசிடிவியில் தெரிந்தது. இதையடுத்து அந்த புகைப்படத்தை வைத்து போலீஸார் தேடி வந்த நிலையில் தானே பகுதியில் விஜய் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதை ஒப்புக் கொண்டார். மேலும் இவர் பல்வேறு பெயர்களில் ஹோட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றியுள்ளார். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவராம். இவர் கடந்த 6 மாதங்களாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்து தங்கியிருந்தாராம். சைஃப் அலிகான் வீட்டிற்கு திருடும் நோக்கில்தான் வந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முஸ்லீம் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஆர்எஸ்எஸ் உறுப்பினரால் 6 முறை கத்தியால் குத்தப்பட்டார். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் சைஃப் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை இதுதான் என Brave Wolf என்ற எக்ஸ்வலைதள ஐடியில் இருந்து பதிவு வைரலாகி வருகிறது.

இது குறித்து உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டதில் அந்த தகவல் பொய்யானது என தெரியவந்தது.
இதுகுறித்து நியூஸ்மீட்டர் என்ற நிறுவனம் செய்த சோதனையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் பொய்யானது. சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர் என்பதற்கும், இந்த தாக்குதலில் அரசியல் தலையீடு இருப்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே இந்த தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Fact Check
வெளியான செய்தி
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் 6 முறை குத்திய நபர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முடிவு
சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனவே இது பொய்யான செய்தி என்பது உண்மை கண்டறியும் சோதனையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications