FACT CHECK: சென்னையில் குழந்தை கடத்தல்களா? பகீர் கிளப்பும் வீடியோ, ஆடியோக்கள்! உண்மை என்ன?
சென்னை: சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக பரவி வரும் ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களால் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கும் நிலையில் அதன் உண்மைத் தன்மை குறித்து பார்ப்போம்.
இது குறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புக் குழு தலைவர் ஐயன் கார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, "சென்னையில் குழந்தை கடத்தல் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் சார்பாக 17.02.2024 அன்று, 'சென்னையில் குழந்தை கடத்தல் தொடர்பாக பரப்பப்படும் காணொளிகளுக்கும் நமது மாநிலத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவறான தகவல்களைப் பார்த்து மக்கள் பதற்றமடைய வேண்டாம்' என்று பதிவு செய்திருந்தோம்.

சென்னை பெருநகர காவல்துறையிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க காவல்துறையும் 'இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் எனவும், பொய்ச் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியை பல செய்தி நிறுவனங்களும் வெளியிட்டு உள்ளன. நமது குழுவின் பரிந்துரையை ஏற்று 20.02.2024 அன்று சென்னை மாநகராட்சி சார்பில் வடசென்னை முழுவதும் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இத்தனை முயற்சி எடுத்தும் இரண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது வேதனையானது. சமூக வலைதள பிரபலங்களிடமும் விழிப்புணர்வு பதிவுகளைப் பகிருமாறு கேட்டுள்ளோம். பொதுமக்களும் முன்வந்து பொய்ச்செய்திகள் மூலம் அப்பாவிகள் தாக்குதல்களுக்கு உள்ளாவதை தவிர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து முன்னதாக காவல்துறை வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதினை சென்னை பெருநகர காவல் துறை உறுதிபட தெரிவித்து கொள்கிறது.
இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும். மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
சென்னையில் முகத்தை மறைத்தக்கொண்டு மர்ம கும்பல் குழந்தைகளை கடத்திச் செல்வதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ.
முடிவு
சித்தரிப்பு காட்சிகள், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications