Fact check: சிப்காட் அலுவலகத்தில் ஒரே ரூமில் இரு டாய்லெட் என பரவிய செய்தி பொய்! ஆதாரத்துடன் விளக்கம்
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் திட்ட அலுவலகத்தில் ஒரே அறையில் இரு கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இணையத்தில் தவறான தகவல் பரவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் அமைந்து உள்ளது. இங்குள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் புதிய சிப்காட் திட்ட அலுவலகம் கட்டப்பட்டது.
1.80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய திட்ட அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது. இது தொடர்பாகத் தான் இணையத்தில் சர்ச்சையானது.

பரவிய தகவல்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் பகுதியில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்ட அலுவலகத்தைச் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். அங்குள்ள ரூமில் அடுத்தடுத்து இரு கழிவறை கோப்பைகள் அமைக்கப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவியது. முதல்வர் திறந்து வைத்த கட்டிடம் என்பதால் சர்ச்சையானது.

உண்மை
ஒரே அறையில் இப்படி இரு டாய்லெட்கள் அமைத்து உள்ளது தொடர்பாகப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து இருந்தனர். ஒப்பந்ததாரர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என்ற ரீதியிலும் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்தச் சூழலில் இது தொடர்பாக நாம் தேடிய போது, இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வந்து உள்ளது.

அதிகாரி விளக்கம்
அதாவது பாதி கட்டி முடிக்கப்பட்டுள்ள படத்தை இணையத்தில் இப்படி தவறாகப் பகிர்ந்து வந்து உள்ளனர். இது தொடர்பாக பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, "அலுவலக கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அந்த இரு கழிவறைக்கு இடையே தடுப்புச் சுவர் ஏற்படுத்தப்படும். அப்போது தான் இரண்டு கழிப்பறை அது இரண்டு கழிவறைகளாக முழுமை பெறும். ஆனால் அதற்குள் இது தொடர்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர்" என்று விளக்கம் அளித்து இருந்தார்.

ப்ளூ பிரிண்ட்
இதற்கிடையே அந்த கழிப்பறையின் ப்ளூ பிரிண்ட்களும் இணையத்தில் இப்போது வெளியாகி உள்ளது. இதில் இரு டாய்லெட்களும் செப்பரேட்டர் கொண்டு பிரிக்கப்படும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. பிரிக்கப்பட்ட பின்னர், ஒரு புறம் ஆண்கள் கழிவறையாகவும் மற்றொரு புறம் பெண்கள் கழிவறையாகவும் இருக்கும்.

கட்டுமான பணிகள்
இந்தச் சூழலில் புதிய படம் ஒன்றும் இணையத்தில் இப்போது வெளியாகி உள்ளது. அதில் கழிப்பறைகள் செப்பரேட்டர் வைத்துப் பிரிக்கப்பட்டு, கதவுகளும் வைக்கப்பட்டு உள்ளது. இது தான் கழிப்பறைகளின் இறுதி திட்டம் என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த படங்களும் வெளியாகி உள்ளது.

தவறான தகவல்
ஆனால், இதை மறைத்துப் பாதி கட்டப்பட்டு இருக்கும் நிலையில், இருந்த கழிவறையின் படங்களை வைத்து இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரியின் விளக்கம் மற்றும் ப்ளு பிரிண்டை வைத்துப் பார்க்கும் போது இணையத்தில் பரவும் தகவல் பொய் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
சிப்காட் திட்ட அலுவலகத்தில் ஒரே கழிவறையில் அடுத்தடுத்து இரு டாய்லெட்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் பரவியது.
முடிவு
அது பாதி கட்டப்பட்டு இருந்த கழிவறை. அதை வைத்து பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications