டாப் கியர் போடுது தங்கம்.. வண்டியை திருப்பிய முதலீட்டாளர்கள்! இனி ராக்கெட் வேகம்! இப்போ வாங்கலாமா?
சென்னை: வட்டி தராத சொத்தாக கருதப்பட்டதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலான சரிவைச் சந்தித்த நிலையில், 4 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் பொருளாதார அச்சங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில், தங்கத்தின் ஸ்பாட் விலை சுமார் 1.2 சதவீதம் உயர்ந்து அவுன்ஸுக்கு ( 28.35 கிராம்) 4,574 டாலராக ( ரூ.4,34,810) உயர்ந்தது. இதற்கு முந்தைய நாளில் மார்ச் 31க்குப் பிறகு இல்லாத அளவுக்கு கீழே விலை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அமெரிக்க அட்வான்ஸ் தங்க ஒப்பந்தங்களும் (U.S. gold futures ) சுமார் 1.2 சதவீதம் உயர்ந்து 4,585 டாலருக்கு மேல் சென்றன. இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் புது நம்பிக்கை உருவாகியுள்ளது. இது விலையை மேலும் அதிகரிக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை
சமீபத்தில் தங்கத்தின் விலை சரிவடைந்ததைத் தொடர்ந்து குறைந்த விலையில் வாங்கும் முதலீட்டாளர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர். மேலும், எண்ணெய் விலைகள் ஓரளவு குறைந்துள்ளதும் தங்க விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கம் விலை உயர்வு
இதனால் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறையவில்லை. அமெரிக்கா நடத்திய இடைநிறுத்த முயற்சிகள் இருந்தபோதும், சூழ்நிலை இன்னும் மோசமாகவே உள்ளது. முக்கியமாக, உலகளவில் எண்ணெய் மற்றும் பிற முக்கிய பொருட்கள் பயணிக்கும் ஹார்முஸ் நீரிணை பாதை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் உலகளாவிய விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளன.
பணவீக்கம்
எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கத்தை தூண்டக் கூடியதாக இருப்பதால், மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கும் முடிவை தள்ளிப் போடக் கூடும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது. பொதுவாக, பணவீக்கம் மற்றும் உலகளாவிய அச்சங்கள் அதிகரிக்கும் போது தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
பாதுகாப்பான முதலீடு
ஆனால் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் சூழலில், தங்கத்தின் கவர்ச்சி குறையக் கூடும். ஏனெனில், வட்டி தராத சொத்தான தங்கத்தை விட, வட்டி தரும் முதலீடுகள் முதலீட்டாளர்களுக்கு அதிக ஈர்ப்பை வழங்கும்.
இருப்பினும், மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருவது, விலை மேலும் சரிவதைக் கட்டுப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தின் தேவை இன்னும் நிலைத்திருக்கிறது.
உலக பொருளாதாரம்
மேலும், இந்த வாரம் வெளியாக இருக்கும் அமெரிக்க வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கை சந்தைக்கு முக்கிய சோதனையாக இருக்கும். பொருளாதாரம் இன்னும் வலுவாக உள்ளதா அல்லது மந்தநிலை நோக்கி செல்கிறதா என்பதையும், அதன்படி வட்டி விகிதங்களில் மாற்றம் வருமா என்பதையும் இந்த தரவு தீர்மானிக்கக்கூடும். தங்கத்தை போல்வே மற்ற விலை உயர்ந்த உலோகங்களின் விலையிலும் ஏற்றம் காணப்பட்டது.
தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
வெள்ளி விலை 1.1 சதவீதம் உயர்ந்த நிலையில், பிளாட்டினம் மற்றும் பலாடியம் ஆகியவற்றின் விலைகளும் முறையே 1.2 மற்றும் 1.8 சதவீதம் உயர்ந்தன. மத்திய கிழக்கு பதற்றம், எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் உலக பொருளாதார நிலைமைகள் ஆகியவை இணைந்து தங்கத்தின் விலை மாற்றத்தை நிர்ணயித்து வருகின்றன. அடுத்த சில நாட்களில் வெளியாகும் பொருளாதார தரவுகள் தங்கத்தின் விலையை தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணியாக இருக்கும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.














Click it and Unblock the Notifications