மண்ணுல போட்ட காசும்.. பொன்னுல போட்ட காசும் வீணாகாது! 2026ல 10 கிராமாவது வாங்குங்க!டாப்ல போயிருவீங்க!
சென்னை: வரலாற்றில் இல்லாத அளவு 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு லட்சத்தை தாண்டி இருக்கிறது. ஜனவரி மாதத்தில் 57,000 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்தை தாண்டி இருக்கிறது. ஜனவரி மாதத்தில் நீங்கள் ஒரு சவரன் வாங்கி இருந்தால் இந்த மாதத்தில் அதன் மதிப்பு இரு மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். எனவே வரும் ஆண்டில் சிறிய அளவிலாவது தங்கத்தை வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கையிலும் கலாசாரத்திலும் தங்கம் ஒரு சாதாரண உலோகம் என்பது மட்டுமல்ல, அது கவுரவம், செல்வச் செழிப்பின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. முதலீடு, சேமிப்பு, நகை, சொத்து என எந்த வடிவில் பார்த்தாலும் தங்கம் எப்போதும் பாதுகாப்பான தேர்வாகவே இருந்து வருகிறது.
அந்த தங்கம் தான் இந்த 2025ஆம் ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால், அதில் சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி லாபத்தை தந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தங்கம் விலை
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச பொருளாதார பதற்றம், போர்ப்பதற்றம், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் கையிருப்பாக வைத்துக் கொள்ளுதல் போன்ற பல காரணங்கள் சேர்ந்து தங்கம் விலையை தொடர்ந்து உயர்த்தின. ரூபாய் பலவீனமடைந்தால் தங்கம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் பெறுவது இயல்பானதே. அதுபோலவே இந்தாண்டும் நடந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.57 ஆயிரம் அளவில்தான் இருந்தது.
2025 தங்க விலை
ஆனால் சில வாரங்களுக்குள் அது 60 ஆயிரத்தையும் தாண்டியது. பின்னர் பிப்ரவரி மாதத்தில் தங்கம் முதல் முறையாக சவரனுக்கு 64 ஆயிரத்தைக் கடந்தது. அதன்பின் தொடர்ந்து உயர்ந்து மார்ச் மாதத்தில் 66 ஆயிரத்தையும் தொட்டது. ஏப்ரல் மாதத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.70,000ஐ கடந்தது. அதுவும் தற்காலிக உயர்வு அல்ல, தொடர்ந்து மேலேறிக் கொண்டே போனது. மே மாதத்தில் 73 ஆயிரத்தையும் தாண்டியது. பிறகு சில நாட்கள் ஏற்றம்-இறக்கம் இருந்தாலும், மீண்டும் அதிக வேகத்தில் உயரத் தொடங்கியது.
ஒரு லட்சம் தங்கம்
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே வரி பிரச்சனைகள், உலகளாவிய பொருளாதார குழப்பங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை தங்கம் நோக்கி திரும்பச் செய்தன. அமெரிக்காவின் கூடுதல் வரி முடிவுகள் ரூபாய் மதிப்பை பாதித்ததால், தங்கம் விலை இந்தியாவில் மேலும் உயர்ந்தது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் புதிய உச்சங்களைக் கண்டு கொண்டே போனது. ஒரு கட்டத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.90 ஆயிரத்தையும் கடந்தது. அதன் பின்னரும் ஏற்றம் நிற்காமல் தொடர்ந்து மேலேறிக் கொண்டே வந்து, டிசம்பர் மாதத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.1 லட்சத்தையும் கடந்தது. இது தங்கம் விலை வரலாற்றில் மிகப்பெரிய உச்சமாகும்.
உலக பொருளாதாரம்
இன்று (டிசம்பர் 31) சிறிய அளவு சரிவு ஏற்பட்டிருந்தாலும், தங்கம் இன்னும் சவரனுக்கு ரூ.1 லட்சம் அருகிலேயே விற்பனையாகி வருகிறது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்ட பலரும் தயக்கம் காட்டினாலும், காலப்போக்கில் மக்கள் மீண்டும் பழையபோல நகை வாங்கத் தொடங்குவார்கள் என்பதே வணிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. தங்கம் விலை குறைய வேண்டுமென்றால், மத்திய அரசு தங்க இறக்குமதி சுங்கத்தைக் குறைத்தால்தான் பெரிய மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லையெனில் தங்கம் விலை உயர்ந்த நிலையில்தான் நீடிக்கும் வாய்ப்பு அதிகம்.
தங்கம் வாங்கலாமா?
"மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் வீணாகாது என்ற பழமொழி உண்டு. அதுபோல் தங்கத்தில் சேமிப்பதும் எப்போதும் பாதுகாப்பான முதலீடாகவே இருந்து வருகிறது. அதனால், வரும் புத்தாண்டை முன்னிட்டு, இயன்ற அளவு ஒரு கிராம் தங்கமாவது, சேமிக்க ஆரம்பித்துவிடலாம் என்று நிதி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் தங்கத்தில் சேமித்த பணம் நீண்ட காலத்தில் நம்மை ஒருபோதும் ஏமாற்றாது என்பதே இதுவரை கிடைத்த அனுபவம் சொல்லும் உண்மை.












Click it and Unblock the Notifications