Gold Rate: தங்கத்து மேல இருந்த நம்பிக்கையே போச்சு..காசிருந்தும் வாங்க யோசிக்கும் மக்கள்! விலை இன்னும் குறையுமா?
சென்னை: கடந்த இரண்டு வாரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைந்தாலும், வாங்குபவர்கள் உடனடியாக வாங்காமல் காத்திருக்கின்றனர். விலை இன்னும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக உயர்ந்த மதிப்புள்ள நகைகளின் விற்பனை மெதுவாக உள்ளது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
கடந்த இரண்டு வாரங்களில் தங்கத்தின் விலை சுமார் 16 சதவீதம் குறைந்து 10 கிராமுக்கு ரூ.1.51 லட்சம் அளவுக்கு வந்துள்ளது. அதே காலத்தில் வெள்ளி விலை கிலோக்கு ரூ.3.8 லட்சம் வரை உயர்ந்திருந்த நிலையில், பின்னர் 38 சதவீதம் சரிந்து ரூ.2.34 லட்சமாக குறைந்துள்ளது.
இவ்வளவு பெரிய விலை சரிவு ஏற்பட்டபோதும், சந்தையில் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கவில்லை என்று நகை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனால் வரும் நாட்களில் விலை உயர்ந்த உலோகங்களின் விலை இன்னும் சரியலாம் என சொல்கின்றனர்.

தங்கம் விலை
நகை விற்பனை நிறுவனமான சென்கோ கோல்ட்&டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தகவல்படி, விலை குறைந்ததால் கடைகளுக்கு வரும் மக்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் உயர்ந்த விலை நகைகளை வாங்கும் முன் பலரும் காத்திருக்கிறார்கள். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாங்கர் சென் கூறும் போது," இலகுரக நகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது மதிப்பில் 25 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விற்பனை அளவில் குறைவு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தங்கம் விலை சரிவு
மும்பையை தலைமையிடமாக கொண்ட பாப்ளே&சன் (Popley & Sons) நிறுவனமும் இதே கருத்தைத் தான் கூறியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பாப்ளே தெரிவித்ததாவது, திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளவர்கள் மட்டுமே தற்போது நகை வாங்குகின்றனர். விலை மேலும் குறையலாம் என்ற நம்பிக்கையில் தங்கம் வாங்குபவர்கள் காத்திருக்கிறார்கள். விலை நிலையாக நிற்கும் போது தங்கத்திற்கு மீண்டும் வலுவான தேவை உருவாகும் என்று துறை நிபுணர்கள் கூறுகின்றனர். உலக அரசியல் பதற்றம் குறைந்ததும், அமெரிக்க டாலர் வலுவடைந்ததும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது இருந்த அழுத்தம் குறைந்ததாக கூறப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா-ஈரான் அணு பேச்சுவார்த்தைகள் குறித்து மறைமுக பங்கு இருப்பதாக தெரிவித்தது சந்தையில் நம்பிக்கையை உயர்த்தியது. இந்த பேச்சுவார்த்தைகள் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளன. அதே நேரத்தில் உக்ரைன்-ரஷ்யா தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகளும் பதற்றத்தை தற்காலிகமாக குறைத்துள்ளன.
உலக அரசியல் சூழல்
தங்கம் தொடர்பான ஆய்வு நிறுவனமான அக்மாண்ட் கோல்ட் (Augmont Gold) நிறுவனத்தின் ஆய்வு பிரிவு தலைவர் ரெனிஷா சய்னானி ( Renisha Chainani) கூறுகையில், உலக அரசியல் சூழல் சற்றே அமைதியானதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை குறைத்துள்ளனர். அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தின் முடிவுகள் வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பை தீர்மானிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் வட்டி விகிதம் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் உள்ளது.
வெள்ளி விலை
இதற்கிடையில், தங்கத்தின் நிலை இன்னும் வலுவாகவே இருப்பதாக India Bullion & Jewellers Association அமைப்பின் துணைத் தலைவர் அக்ஷா காம்போஜ் தெரிவித்துள்ளார். சமீபத்திய விலை சரிவு தற்காலிக மாற்றமாகவே பார்க்கப்படுகிறது என்றும், உலக அளவிலான உறுதியற்ற நிலை தொடர்ந்தால் தங்கம் வலுவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வெள்ளி விலை சமீபத்தில் வேகமான உயர்வுக்குப் பிறகு சரிவு நிலையை சந்தித்து வருகிறது. தொழில் துறையின் மாற்றங்களுக்கு வெள்ளி விலை எளிதில் பாதிக்கப்படும் தன்மை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், முந்தைய வாரங்களுடன் ஒப்பிடும்போது விலை இன்னும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. மொத்தத்தில், விலை குறைந்தாலும் உடனடி வாங்கும் நிலை உருவாகவில்லை. சந்தை நிலைமை தெளிவாகும் வரை வாங்குபவர்கள் காத்திருக்கும் போக்கு தொடர்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications