தங்கத்திற்கு திடீர் நோ.. உலக தங்க மார்க்கெட்டையே ஆட வைக்கும் இந்தியா.. ஸ்மார்ட்டான மூவ்!
சென்னை: தங்கத்தின் விலையில் ஏற்படும் நிலையற்றத்தன்மை காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தற்காலிகமாக தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைப்பால் இப்போது தங்கம் விலை உயருகிறது . எதிர்காலத்தில் குறையும். அப்போது வாங்குவது ஸ்மார்ட்டான முடிவு என்பதால் இந்தியா இப்போது தங்கம் வாங்காமல் பின்வாங்கி உள்ளது. உலகளாவிய மத்திய வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் $84 பில்லியன் மதிப்புள்ள தங்கத்தை வாங்கியுள்ளன.
அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மத்திய வங்கிகளுக்கு தங்கம் ஒரு முக்கியமான முதலீடாக மாறியுள்ளது. இருப்பினும், தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், இதில் முதலீடு செய்வது சவாலாக மாறியுள்ளது.

தங்கம் விலை
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் ஜூலை 2025 அறிக்கையின்படி, உலக தங்கச் சந்தையில் இந்தியாவின் பங்கு 15% ஆகும், இதன் மதிப்பு சுமார் $23 டிரில்லியன். தற்போதைய உலக அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் $12.5 டிரில்லியன் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 65% நகைகள் வடிவில் உள்ளன. உலகப் பொருளாதாரம் மோசமடைந்து வருவதால், அடுத்தது என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால் பல நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 35% அதிகரித்து, 2020 நிதியாண்டில் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது. உலக தங்க தரவரிசையில் இந்தியா உயர்ந்துள்ளது. தங்க இருப்பில் உலகின் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது, 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆக உள்ளது, இது 2021 இல் 6.86% ஆக இருந்தது. இந்தியாவின் இந்த விரைவான வளர்ச்சி சீனாவிற்கு சவாலாக மாறக்கூடும்.
சர்வதேச தங்கம் விலை
சமீபத்திய ஆண்டுகளில் டாலர் நிலையற்றதாக இருப்பதால், தங்கம் நிலையான பொருளாதார பாதுகாப்பை வழங்குகிறது. அமெரிக்க டாலர் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு நாணயமாக இருந்தாலும், அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக டாலரை முழுமையாக நம்ப முடியாத நிலை உள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் டாலர் இருப்புக்களை வைத்திருக்கும் மத்திய வங்கிகளைப் பாதிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு
பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது பணத்தின் மதிப்புகள் குறையும், ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவின்போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டைக் காக்கும். இதுபோன்ற நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி வந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆர்பிஐ வெளியிட்ட தரவுகளின்படி, ஒரே வாரத்தில் தங்கத்தின் மதிப்பு ரூ.11,986 கோடி உயர்ந்து, மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.6,88,496 கோடியாக அதிகரித்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார சரிவின்போது ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு மதிப்பு அதிகரித்தது. உலக அளவில் பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் தங்கத்தை தொடர்ந்து வாங்கி வருகிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவிலிருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருகிறது. வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியா $76.37 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே காலகட்டத்தில், $41.62 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது, இதன் விளைவாக $34.75 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது.
அமெரிக்கா இந்தியா தங்கம்
அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் ஒரு வழியாக, வர்த்தகப் பல்வகைமை முறையை மத்திய அரசு கையாள முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் நகைகளை இறக்குமதி செய்ய உள்ளனர். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உற்பத்தியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. இவற்றில் கணிசமான அளவை அமெரிக்காவிலிருந்து இந்தியா எளிதாகப் பெற முடியும். இதன் மூலம் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் கையிருப்பு அதிகரிக்கும்.
நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி உட்பட விலைமதிப்பற்ற உலோகங்களின் மொத்த இறக்குமதி $74 பில்லியனைத் தாண்டியுள்ளது. 2023-24ல் இந்தியா $74.81 பில்லியன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை இறக்குமதி செய்தது. இதில் சுமார் $5 பில்லியன் இறக்குமதிகள் அமெரிக்காவிலிருந்து வந்தவை. இதை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியில், இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கம் வாங்கும் போக்கு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.












Click it and Unblock the Notifications