தீபாவளிக்குள் தங்கத்தின் விலை.. பல மடங்கு உயரும்.. "கோல்டன் மார்க்கை" தாண்டும் மதிப்பு.. என்ன ஆகும்?
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தீபாவளி அன்று தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும் என்று முதலீட்டு வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
தங்கத்தின் விலை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், இது முதலீடு செய்ய சரியான நேரமா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் விலை ஏன் எவ்வளவு உயரும்? மேலும் எவ்வளவு உயரக்கூடும்? என்பதை இங்கே பார்க்கலாம்.

சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முதன்முறையாக 3,840 டாலர்களைக் கடந்துள்ளது. இந்திய சந்தையில், 10 கிராம் தங்கத்தின் விலை 1,17,800 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிறது. முதலீட்டாளர்களுக்கு இது கிட்டத்தட்ட 17% லாபத்தை வழங்கியுள்ளது.
ஏற்ற இறக்கமாகவே இருக்கும்
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலைகளும் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இருப்பினும், 1,16,000 ரூபாய்க்கு மேல் தங்கத்தில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட இந்த திடீர் உயர்வு சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து பணத்தை எடுத்து தங்கம், வெள்ளி மற்றும் கிரிப்டோ போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் மாற்றி வருகின்றனர். இந்த போக்கு உலகளவில் காணப்படுகிறது.
தீபாவளிக்கும் உயருமா?
இந்த தீபாவளிக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை 1,25,000 ரூபாயை (Golden Mark) எட்டுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் விலைகள் சீராக உயர்ந்து வருவதால், இந்த இலக்கை எட்டுவது சாத்தியமாகவே தெரிகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தங்கம் 18,000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 20 அன்று, 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.1,00,150 ஆக இருந்தது. இன்று அது ரூ.1,18,640 ஆக உயர்ந்துள்ளது. இது 50 நாட்களில் சுமார் ரூ.18,500 அதிகரிப்பாகும். அதேபோல், 22 காரட் தங்கம் அதே காலகட்டத்தில் ரூ.91,800-ல் இருந்து ரூ.1,08,750 ஆக உயர்ந்து, 18% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
உலகளாவிய பிரச்சனைகள் - தங்கம் விலை
உலகளாவிய பிரச்சனைகள், போர்கள் மற்றும் நாணய மதிப்பு குறைவு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான புகலிடங்களை நாடி வருகின்றனர். வட்டி விகிதங்கள் குறைவதற்கான எதிர்பார்ப்புகள் மற்றும் அமெரிக்க டாலரின் பலவீனம் ஆகியவை தங்கத்தின் மீதான கவர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளன.
ஈடிஎஃப்கள் முதல் தங்கக்கட்டிகள் மற்றும் நாணயங்கள் வரை, தனிப்பட்ட முதலீட்டாளர்களும் பெரிய நிறுவனங்களும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். அதிகரித்து வரும் தேவை, குறைந்த விநியோகம் ஆகிய காரணிகள் விலைகளை மேலும் உயர்த்தி வருகின்றன. பணவீக்க அச்சங்கள் நிலவும் இந்த நேரத்தில், தங்கம் பாதுகாப்பான சேமிப்பு மதிப்பைக் கொண்டுள்ளது.
இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்குவதற்கான சிறந்த வழி என்ன?
முதலீட்டை ஒரே இடத்தில செய்யாமல் பிரித்து முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உதாரணமாக, 5 லட்சம் ரூபாயை ஐந்து பகுதிகளாகப் பிரித்து முதலீடு செய்வது, சராசரி விலையைக் குறைத்து அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதாவது தீபாவளிக்கு நிறைய பணம் இருந்தால் தங்கம் மட்டும் வாங்காமல் மற்ற முதலீடு திட்டங்களையும் வாங்கலாம் என்று அறிவுரை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications