மணமணக்க இடிச்ச நாட்டுக்கோழி.. அதென்ன கோழி ரசம்.. நல்ல நல்ல சத்துள்ள நாட்டுக்கோழி சூப்.. பெஸ்ட் உணவு
சென்னை: எந்த உணவு கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்கிறதோ, அதுவே மிகச்சிறந்த உணவு என்கிறார்கள் நிபுணர்கள்.. இதை மையப்படுத்திதான், நாட்டுக்கோழியை சிறந்த உணவில் வகைப்படுத்தியிருக்ககிறார்கள்.
100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளதால்தான், மிகச்சிறந்த உணவாக விளங்குகிறது.. இதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறதாம்.. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம் உள்ளது. ஆனால், 100 கிராம் நாட்டுக்கோழியில் 21 கிராம் புரோட்டீன் இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நரம்புகள்: வளரும் குழந்தைகள் முதல், உடலில் பலமில்லாதவர்கள் வரை, அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இந்த நாட்டுக்கோழி.. உடலுக்கு சக்தியை தரக்கூடியது.. தசைகளுக்கு உறுதியை தரக்கூடியது.. நரம்புகளுக்கு உரத்தையும் தரக்கூடியது.. காமத்தை தூண்டும் உணவு பட்டியலில் நாட்டுக்கோழிக்கு முக்கிய இடமிருக்கிறதாம்.
"கோழி அடித்து குழம்பு" என்றாலே அது நம்ம நாட்டுக்கோழியைதான். மருந்தாகவும், விருந்தாகவும் விளங்கி கொண்டிருக்கும் இந்த நாட்டுக்கோழியில் ரசம், சூப், போல வைப்பதுதான் பெஸ்ட் சாய்ஸ் என்பார்கள்.. இந்த ரசம், சுவாச கோளாறுகளை தீர்க்கிறது.. சளி, இருமல், தொண்டை வலிக்கு நிவாரணம் தரக்கூடியது..
கோழி ரசம்: ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி, பச்சை மிளகாய், பொடித்த மிளகு, சீரகம், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போன்ற அனைத்தையுமே ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.. பிறகு, சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை கொட்டி, தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். இறுதியில், மல்லி இலை தூவினால், நாட்டுக்கோழி ரசம்.
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, பிறகு நாட்டுக்கோழியையும் சேர்த்து வதக்க வேண்டும். மல்லிவிதை + சீரக விதை + மிளகு இவைகளை விழுதாக அரைத்து, குக்கரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இறுதியில் கொத்தமல்லியை தூவினால் நாட்டுக்கோழி சூப் ரெடி.
நாட்டுக்கோழி சாறு: நாட்டுக்கோழியை அம்மியில் நன்றாக நசுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இடித்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இப்போது இடித்து வைத்த நாட்டுக்கோழியை சேர்த்து, மஞ்சள் பொடி, மல்லிதூள், கல் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். இதுவே நாட்டுக்கோழி இடிச்சச் சாறு..
பொதுவாக குழந்தை பெற்ற பெண்களுக்குத்தான், இழந்த சத்துகளை மறுபடியும் பெறுவதற்காக நாட்டுக்கோழி செய்து தருவார்கள்.. ஆனால், இப்போதெல்லாம் கருத்தரித்தவுடனே, நாட்டுக்கோழி உணவுகளை சாப்பிட சொல்கிறார்கள்.. அந்த அளவுக்கு நாட்டுக்கோழி கர்ப்பிணிகளுக்கு நல்லது... சாமை அரிசியை வைத்து, கர்ப்பிணிகளுக்கு சத்தான நாட்டுக்கோழி பிரியாணி எப்படி செய்வது தெரியுமா?
கர்ப்பிணிகள்: ஒரு குக்கரில் சுத்தம் செய்யப்பட்ட நாட்டுக்கோழியை சேர்த்து, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகு, மஞ்சள்தூள், தண்ணீர் ஊற்றி நன்றாக விசில் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கிராம்பு, பிரியாணி இலை, வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு, தயிர், என அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து வதக்க வேண்டும்.
சத்தான பிரியாணி: இத்துடன் வேகவைத்த நாட்டுக்கோழிகளை சேர்த்து கிளற வேண்டும். இப்போது, நாட்டுக்கோழி வேகவைத்த சூப்களை அளந்து, சாமை அரிசிக்கு தேவையான அளவு ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு, கழுவி வைத்திருக்கும் சாமை அரிசியையும் சேர்த்து, வேகவைத்து இறக்கினால் பிரியாணி ரெடி.












Click it and Unblock the Notifications