சிற்றரத்தை.. 1 துண்டு மூலிகை போதுமே இருமல் பறந்துடும்.. கர்ப்பிணி சாப்பிடலாமா? சித்தரத்தையின் சிறப்பு
சென்னை: சளி, இருமல், ஜலதோஷம், கபம் என ஒட்டுமொத்த நுரையீரல் தொந்தரவை நீக்கக்கூடிய சித்தரத்தை பற்றி தெரியுமா? கர்ப்பிணிகள் இந்த சிற்றரத்தையை சாப்பிடலாமா? எப்படி பயன்படுத்துவது? என்பதை சுருக்கமாக காணலாம்.
அரத்தை, சிற்றரத்தை எனப்படும் சித்தரத்தை, அச்சு அசல் இஞ்சி போலவே இருக்கும்.. சிற்றரத்தை, பேரரத்தை என்று 2 வகைகள் இருந்தாலும், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு உதவக்கூடியது சிற்றரத்தைதான்.

லேகியம்: கர்ப்பிணிகளுக்கு தயாராகும் லேகியங்களில், இந்த சித்தரத்தையின் வேர்களை சேர்ப்பார்களாம். அந்த அளவுக்கு மருத்துவ குணம் நிறைந்தது. பிரசவம் முடிந்த பெண்களுக்கு தயாரித்து தரப்படும் மருந்து குழம்புகளிலும் சித்தரத்தையின் அதீத பங்கு உள்ளது..
இந்த சித்தரத்தை கொழுப்பு சத்தை கரைக்கக்கூடியது. ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது.. புற்றுநோய் வராமல் தடுக்கும் அதிசய கூறுகளை, இந்த சிற்றரத்தையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், இதிலுள்ள "அசிடாக்ஸிகவிக்கால் அசிட்டேட்" என்ற மூலப்பொருள், புற்றுநோய் மரபணுக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க செய்கிறது.
எலும்புகள்: விந்தணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு.. அதேபோல, எலும்புகள் பலம் பெற வேண்டுமானால், சிற்றரத்தையுடன் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து பவுடராக்கி, அதனை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை காய்ந்த கிழங்காகவும் பொடியாகவும் கிடைக்கிறது. அல்லது சிற்றரத்தையை வீட்டிலேயே பொடி செய்து வைத்து கொண்டு, பல வகைகளில் மருந்தாக பயன்படுத்தலாம். இந்த சிற்றரத்தை பொடியுடன் சுக்குத்தூள் பொடியையும் கலந்து தேனில் சாப்பிட்டால் சளி, இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.. குழந்தைகளுக்கும் இதனை தரலாம்.. பெரியவர்களாக இருந்தால், வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்..
இருமல் தொந்தரவு: இந்த பவுடரை, தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கும்போது, காய்ச்சலும் நீங்கும்.. அல்லது வறட்டு இருமல் தொந்தரவாக இருந்தால், சிறு சித்தரத்தை துண்டை வாயில் அடக்கி வைத்து கொண்டாலே உமிழ்நீருடன் கலந்து சாறு, வறட்டு இருமல் சீராகும். அல்லது பனங்கற்கண்டுடன் கலந்தும் சாப்பிடலாம்.
அல்லது இந்த பவுடரில் அரை ஸ்பூன், அதிமதுரம் பவுடர் அரை ஸ்பூன், திரிகடுகம் பவுடர் அரை ஸ்பூன் இவற்றை எல்லாம் ஒன்றாக அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து இறக்க வேண்டும. இதில் சிறிது தேன் கலந்து குடிக்கும்போது, மூக்கடைப்பு, நெஞ்சக சளி, ஒற்றை தலைவலி உட்பட அனைத்துவிதமான சைனஸ் தொந்தரவுகளும் விலகும்.
வயிறு கோளாறு: இந்த சிற்றரத்தை உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியை தரக்கூடியது.. குரல் வளத்தை தரக்கூடியது.. வாய் துர்நாற்றத்தை நீக்கக்கூடியது.. 2 டம்ளர் தண்ணீரில் சிற்றரத்தையை கலந்து வாய் கொப்புளித்தால், வாய்ப்புண்கள், துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் சீராகும்.. பற்பொடிகளிலும் சிற்றரத்தையின் வேர்களை சேர்த்து தயாரிப்பார்கள். அதேபோல, வயிற்று கடுப்பு, வயிற்று கோளாறு மற்றும் வாயு கோளாறுகளை அகற்ற சித்தரத்தை பயன்படுகிறது..












Click it and Unblock the Notifications