வயிறு பெரிசா இருந்தால் அது தொப்பைனு நினைச்சு அசால்ட்டா விடாதீங்க.. 12 ஆண்டுகள் வளர்ந்த கேன்சர் கட்டி
ஒஸ்லோ: இப்போது உடல் பருமன் என்பது தவிர்க்கவே முடியாத பிரச்சினையாக மாறிவிட்டது. அப்படி தான் ஒருவருக்கு வயிற்றில் தொப்பை இருந்துள்ளது. அது பெரிதாகிக் கொண்டே போன நிலையில், சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகே அது தொப்பை இல்லை.. கேன்சர் கட்டி என்பது தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வே நாட்டில் வசிக்கும் 59 வயதான நபருக்குத் தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த நபருக்குச் வயிறு சற்று பெரிதாக இருந்துள்ளது.

தொப்பை: பொதுவாகவே ஒரு வயதைக் கடந்தால் ஆண்களுக்குத் தொப்பை வரும். எனவே, இதைத் தொப்பை என்றே மருத்துவர்கள் நினைத்துள்ளனர். அதுவும் ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் இல்லை.. சுமார் 12 ஆண்டுகள் இதைத் தொப்பை என்றே நினைத்து மருத்துவர்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அதன் பிறகு தான் அது கேன்சர் கட்டி என்பது தெரிய வந்தது... அதற்குள் அது சுமார் 27 கிலோ எடையுள்ள கேன்சர் கட்டியாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் உள்ள நார்வே நாட்டில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் தாமஸ் க்ராட் என்பவருக்கு வயிறு திடீரென பெரிதாக தொடங்கியுள்ளது. அவரும் முதலில் இதைக் கொழுப்பு என்றே நினைத்தார். இது அவருக்கு கடும் வலியைக் கொடுத்தது மட்டுமின்றி, பெரிதாகிக் கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்களும் கூட உடல் பருமன் என்றே நினைத்து எடை இழப்பு மாத்திரைகளைக் கொடுத்துள்ளனர்.
எடை குறையவே இல்லை: அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு உடல் பருமன் உடன் டைப் 2 நீரிழிவு பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது தான் எடை இழப்பு மாத்திரையை எடுத்துள்ளார். இதனால் உடலில் இருந்த கொழுப்புகள் குறைந்த போதிலும், கேன்சர் கட்டி பெரிதாகி இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்தமாக எடை குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது.
சுமார் 12 ஆண்டுகளாக இதே நிலை தொடர்ந்த நிலையில், வலியும் அதிகரித்துள்ளது. இதனால் உடல் பருமனைச் சமாளிக்க இரைப்பை ஸ்லீவ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். தாமஸும் ஓகே சொல்ல, அதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது. அப்போது அவரது ஸ்கேன் ரிப்போர்ட்களை மருத்துவர் கவனமாகப் பார்த்த போது தான் அது கேன்சர் கட்டி என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
மருத்துவர்கள் தகவல்: இது தொடர்பாக தாமஸ் கூறுகையில், "என் வயிறு பெரிதாகிக் கொண்டே இருந்தது. நான் மருத்துவரிடம் சென்றேன்.. அவர்கள் மாத்திரைகளைத் தந்தனர். ஆனால், பெரியளவில் அதற்குப் பலன் இல்லை. இதையடுத்து இரைப்பை ஸ்லீவ் செய்யச் சொன்னார்கள். இந்த அறுவை சிகிச்சைக்காக நான் உடலில் தயாரான போது தான் அது கேன்சர் கட்டி என்று சொன்னார்கள்.
கேன்சர் கட்டியைப் பார்க்காமல் உடல் எடையைக் குறைக்கும் மருந்தை மருத்துவர்கள் தந்ததால் எனது முகம், கை, கால்கள் மெலிதாக மாறியிருந்தது. வயிறு மட்டுமே பெரிதாக இருந்தது. உண்மையில் எனக்கு உடல் பருமன் இல்லை.. சொல்லப் போனால் ஊட்டச்சத்துக் குறைபாடு தான் இருந்தது. எனது வயிற்றில் இவ்வளவு பெரிய கேன்சர் கட்டி இருக்கிறது என்ற செய்தி எனக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது" என்றார்.
கேன்சர் ஆப்ரேஷன்: வயிற்றில் கேன்சர் கட்டி இருப்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த செப். மாதம் அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டது. சுமார் 10 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் அந்த கேன்சர் கட்டி அகற்றப்பட்டது. ஆனாலும், வயிற்றுக்குள் கேன்சர் கட்டி தொடர்ந்து வளர்ந்து வருகிறதாம்.. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் அவரது சிறுகுடலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், வலது சிறுநீரகம் அகற்றப்பட்டது.
அந்த கேன்சர் திசு பல உறுப்புகளுடன் இணைந்துவிட்டதாம்.. இதனால் அதை முழுமையாக அகற்ற முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications