வீராணம் ஏரிக்கு இப்படி ஒரு நிலையா..சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரி. காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள இந்த வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி ஆக இருக்கிறது. இந்த ஏரி சென்னை மக்களின் தாகத்தை தணித்து வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் இருந்து ஆரம்ப காலத்தில் நாள்தோறும் வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வந்தது. நீர் வரத்து இல்லாததால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவநாடியான வீராணம் ஏரி வேகமாக வற்றி வருகிறது. கர்நாடகா முதல் காவிரி டெல்டா வரை நீடிக்கும் வறட்சி, இப்போது சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதம் பிறந்துவிட்டாலே தென்மேற்கு பருவமழை தென்மாநிலங்களைக் குளிரூட்டத் தொடங்கிவிடும்.

ஆனால், இந்த ஆண்டு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. சென்னையிலும் போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை; காவிரியின் உயிர்நாடியாக விளங்கும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியான கர்நாடகாவிலும் பருவமழை பொய்த்துப் போயுள்ளது. இதன் நேரடி விளைவாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவெனச் சரிந்து, காவிரி டெல்டா மாவட்டங்கள் மழையின்றி வறட்சியில் தவித்து வருகின்றன.
காவிரியின் இந்த வறட்சிப் சங்கிலித் தொடர், இப்போது கடலூர் மாவட்டத்தின் எல்லையைக் கடந்து சென்னை மக்களின் தொண்டையை நனைக்கும் வீராணம் ஏரி வரை எதிரொலித்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் அமைந்துள்ளது. இதன் மொத்த நீர்மட்டக் கொள்ளளவு 47.50 அடியாகும்.
கடந்த 1967-ல் தொடங்கப்பட்டு கைவிடப்பட்ட வீராணம் திட்டம், பின்னர் 'புதிய வீராணம் திட்டம்' மூலம் புத்துயிர் பெற்று 2004 முதல் சென்னைக்குத் தடையின்றி குடிநீர் வழங்கி வருகிறது. தொடக்கத்தில் நாளொன்றுக்கு 76 கன அடியாக இருந்த நீர் விநியோகம், சமீபகாலமாக 73 கன அடியாகக் குறைக்கப்பட்டு, 235 கிலோ மீட்டர் தூர ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணையில் நீர் இல்லாததால், வீராணத்திற்கான நீர் வரத்து முற்றிலும் நின்றுபோனது. உள்ளூர் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் சொட்டு மழையில்லை. இதன் காரணமாக, நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 42.78 அடியாகக் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது முற்றிலும் சிக்கலாகும். சென்னைவாசிகள் இப்போதே தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யாவிடில், தலைநகரம் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்பது மட்டும் நிச்சயம்!














Click it and Unblock the Notifications