ரமலான் நோன்பு காலங்களில் உடற்பயிற்சி செய்யலாமா? வியர்வை வெளியேறலாமா? டாக்டர் விளக்கம்
சென்னை: ரமலான் நோன்பு காலங்களில் உடற்பயிற்சி செய்யலாமா என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: ரமலான் நோன்பு காலங்களில் உடல் உழைப்பு செய்வதோ? அல்லது வியர்வை வெளியேறுவதோ? பாதிப்பு உண்டாக்கக் கூடும் என்று என்னுள் நான் கட்டமைத்து வைத்திருந்த நம்பிக்கையை உடைக்க கடந்த மூன்று நாட்களில் சுய பரிசோதனை செய்து பார்த்தேன்.

இறைவனின் துணையுடன் நான் கட்டமைத்து வைத்திருந்த நம்பிக்கை பொய்யெனப் புரிந்து கொண்டேன். கடந்த மூன்று நாட்களாக குறைந்தபட்சம் ஒரு மணிநேர உடல் உழைப்பை செய்து வருகிறேன். எனினும் எனது சக்திக்கு மேற்பட்டு அல்லது உடலின் மீது வலிந்து திணிக்குமாறு உடல் உழைப்பில் ஈடுபடவில்லை.
இத்தகைய சூழலில் கடந்த ஆறு நாட்களாக செல்லாமல் விடுப்பு விட்டிருந்த உடற்பயிற்சிக் கூடத்துக்குச் இன்று முதல் சென்று மிதமான வேகத்தில் நடைப்பயிற்சி செய்தேன். நான் குறைமாவு நிறை கொழுப்பு எனும் பேலியோ உணவு முறையில் இருப்பதால் காலை 200 மில்லி முழுக்கொழுப்பு பாலில் 30 கிராம் வெண்ணெய் கலந்து பருகி சஹர் வைத்து வருகிறேன்.
இதனால் என் உடல் "உணவு சார்ந்த கீடோசிஸ்"( நியூட்ரிசனல் கீடோசிஸ்) நிலையில் இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் பலன்களை அறுவடை செய்து வருகிறேன். இதற்கடுத்த படியாக ரமலான் மாத கடமையான நோன்பில் நீர் கூட அருந்தாத ட்ரை ஃபாஸ்டிங்கில் உடல் பதிமூன்று மணிநேரங்கள் இருக்கிறது. இதன் மூலம் உடலானது "விரதம் சார்ந்த கீடோசிஸ்" ( ஸ்டார்வேசன் கீடோசிஸ்) நிலைக்குச் செல்கிறது. இதன் மூலம் கிடைக்கும் பலன்களும், இத்துடன் மிதமான நடைப்பயிற்சி அல்லது மிதிவண்டிப் பயிற்சி போன்றவற்றைச் செய்யும் போது உடல் பயிற்சிக்குப் பின்பான கீடோசிஸ் நிலையினால் ( போஸ்ட் எக்சர்சைஸ் கீடோசிஸ்) ஏற்படும் பலன்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
சமீபத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆடிய ஐம்பது ஓவர் கிரிக்கெட் போட்டியில் போட்டியின் நடுவே பேட்ஸ்மேன்கள் நோன்பு திறந்ததைப் பார்த்ததும் எனக்குள்ளும் உத்வேகம் பிறந்தது. எனினும் ரமலான் நோன்புடன் உடற்பயிற்சியை இணைக்கும் போது உடலுக்கு அதீத பளுவை வலியத் திணிக்கக்கூடாது என்பதில் திண்ணமாக இருக்கிறேன்.
காரணம் சங்கைமிகு இந்த மாதத்தில் உடல் வலுவைப் பேணுவதைக் காட்டிலும் கடமையான நோன்பு பாழாகிவிடக்கூடாது என்பதே முக்கியமானது. எனினும் நோன்பு வைத்து விட்டு அதைக் காரணமாகக் கூறி வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதும் படுக்கையிலேயே படுத்துக் கிடப்பதும் நபி வழியன்று என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமியர்களில் பலர் கடமையான நோன்பை வைத்துக் கொண்டும் பல கடுமையான பணிகளை வெயிலென்றும் பாராமல் செய்து வருவதையும் காண முடிகின்றது. அவர்களை ஒப்பிடும் போது நாம் செய்யும் உடல் பயிற்சி வலுகுறைவானதாகவே படுகிறது. என்னைப் பொருத்தவரை நோன்பு என்பது உடலுக்கு என்பதைத் தாண்டி நமது மனதுக்கு என்பதே முதலிடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
வயிறு பட்டினி கிடப்பதுநா தாகித்து இருப்பது என்பதைத் தாண்டி மனம் இறையச்சத்துடன் இருப்பது முக்கியமாகிறது. உடற்பயிற்சி குறித்து நான் எழுதியதும் தயவு கூர்ந்து நீரிழிவு , ரத்தக் கொதிப்பு, இதய நோய் , சிறுநீரக நோய் , முதியவர்கள் என்று உடலால் சவால்களைக் கொண்டிருப்போர் உடனே பலப்பரீட்சையில் இறங்கிட வேண்டாம்.
அவரவர் சக்திக்குட்பட்டு அவரவர் வலிமைக்குட்பட்டு தங்களால் இயன்ற உடற்பயிற்சியை செய்து வருவது நல்லது என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை இடுகிறேன். பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு நடந்து செல்வதும் உடற்பயிற்சி தான் ஐவேளை தொழுகையுடன் இரவுத் தொழுகை நின்று தொழுவதும் உடற்பயிற்சி தான்.
இத்துடன் கூடவே வெயில் இல்லாத நேரங்களில் மிதமான வேகத்தில் சில நாழிகைகள் நடப்பதும் நன்மையே. ரமலானில் உடல் பயிற்சி அவசியம் தானா? என்ற கேள்விக்கு எனது பதில் அது அவரவர் உடல் மற்றும் மன உறுதியைப் பொருத்தது. எனினும் அவரவர் வலிமைக்குட்பட்டு உடல் பயிற்சி செய்வதால் தேகத்துக்கு நன்மைகள் இன்னும் கூடுதலாகக் கிடைக்கின்றன என்பதும் உண்மை.
ரமலானில் கிடைக்கும் பல்வேறு நன்மைகளில் உடல் பயிற்சியினால் கிடைக்கும் நன்மையும் சேரும். எனினும் எதிலும் வரம்பு மீறிட வேண்டாம். வரம்பு மீறுபவர்களை இறைவன் விரும்புவதில்லை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications