கருப்பு நிறம் கொண்ட பெற்றோருக்கு குழந்தை வெள்ளையாக பிறக்குமா? டாக்டர் விளக்கம்!
சென்னை: தான் கருப்பாக இருக்கும் நிலையில் தனக்கு பிறந்த குழந்தை வெள்ளையாக பிறந்ததால் சந்தேகமடைந்த தந்தை, அந்த குழந்தையை கொன்றது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார். மேலும் அந்த தந்தைக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாநிற/ கருநிற தோலுடன் உள்ள பெற்றோருக்கு வெள்ளை நிறத்தில் குழந்தை பிறக்கலாம் என்ற மருத்துவ அறிவியல் உண்மை இந்த நபருக்குத் தெரிந்திருந்தால் இந்த மாபாதக செயலில் ஈடுபட்டிருப்பாரா?

சந்தேக நோய் என்பது தீ போன்றது தன்னையும் அழித்து தன் சுற்றத்தையும் அழிக்கும் தன்மை கொண்டது அதிலும் இணையரிடம் சந்தேக நோய் வந்து விட்டால் அது நோய் என்று அறிந்து அதற்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தாமதித்தால் இது போன்ற மனநல கோளாறுகளை ஏற்படுத்தி இறுதியில் கொலை செய்யும் அளவு கொண்டு சென்றிருக்கிறது. உண்மையில் பெற்றோர் இருவரும் மாநிறம் அல்லது கருப்பு நிறத்தில் இருந்தாலும் பிறக்கும் குழந்தை வெள்ளை வெளேர் என்று பிறக்கலாம்.
இதற்குக் காரணம் நமது மரபணுக்கள் தாய் தந்தை இருவரை ஒத்த நிறத்தில் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது ஆயினும் அப்படியே தான் பிறக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
காரணம், தோல் நிறத்தை 12 வெவ்வேறு மரபணுக்கள் நிர்வகிக்கின்றன. கூடவே தோலின் நிறத்தை நிர்வகிக்கும் மரபணுக்கள் தாயிடம் இருந்தும் தந்தையிடம் இருந்தும் குழந்தைக்கு வந்தாலும் எந்த மரபணு வெளிப்பட வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய இயலாது.
அவர்களுக்கு முன்னோர்கள் (அவர்கள் அறிந்திடாத முன்னோர்) யாரேனும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் அந்த வெள்ளை நிறத்துக்கான மரபணு இந்த பெற்றோர்களிடம் இருந்திருக்கும். ஆனால் அது பெற்றோர்களிடையே வெளிப்பட்டிருக்காது.
இந்த குழந்தையிடம் அந்த வெள்ளை நிறத்துக்கான மரபணு வெளிப்பட்டிருக்கும். அதனால் குழந்தை வெள்ளை நிறத்தில் இருந்திருக்கும். இன்னும் MC1R என்ற மரபணு உள்ளது. இது ஒருவரிடத்தில் வெளிப்பட்டால் அவர் மாநிறம் / கருப்பாக தோலுடன் இருப்பார். அதுவே தாய் தந்தை இருவரிடம் இருந்தும் செயல்படாத MC1R மரபணு குழந்தைக்கு வந்துவிடின் தாய் தந்தை இருவரும் கருப்பு நிறத்தில் இருந்தாலும் குழந்தை வெள்ளை நிறத்தில் தான் பிறக்கும்.
இவையன்றி தாய் தந்தை இருவரிடத்திலேயும் அல்பினிசம் என்ற பிறவி மெலனின் (கருமி) குறைபாட்டுக்கான மரபணு வெளிப்பட்டால் அந்த இரண்டு மரபணுவும் குழந்தைக்கு கடத்தப்பட்டால் குழந்தை அல்பினோவாக பிறக்கும். அதாவது பிறவி மரபணுக் கோளாறு காரணமாக வெள்ளை நிறத்தில் பிறக்கும்.
இப்படி குழந்தையின் நிறம் பல்வேறு காரணிகளால் குறிப்பாக நம்மால் கட்டுப்படுத்த இயலாத மரபணுக் காரணிகளால் கிடைக்கப்பெற்றதற்கு அதற்கு மரணம் எனும் தண்டனையைக் கொடுத்த சந்தேக நோய் கொண்ட இவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அன்னாரை இழந்து வாடும் அவரது தாய் மற்றும் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
நமது எண்ணங்கள், சிந்தனைகள் மீது நமக்கு கட்டுப்பாடு வேண்டும். இல்லாவிடில் நமது செயல்கள் மீது கட்டுப்பாடு இருக்காது என்று எழுதினேன் . சந்தேக நோய் என்பது சிந்தனை மற்றும் எண்ணங்களில் ஏற்படும் கோளாறு. இதற்கு மனநல மருத்துவ சிகிச்சை அவசியம். இதை சரியாக எடுத்திருந்தால் முறையான மருத்துவ ஆலோசனை பெற்றிருந்தால் இந்தக் கொலையைத் தவிர்த்திருக்கலாம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications