Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஸ்வரூபமாகும் இர்பான் விவகாரம்! நோயாளியின் உடையை கூட யோசிக்காமல் வீடியோ எடுப்பதா? டாக்டர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறுவை சிகிச்சை அறையில் இருந்து கொண்டு குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்பான் வீடியோவாக எடுத்தது பெரும் சர்ச்சையான நிலையில் அறுவை சிகிச்சை அரங்குகளுக்குள் மருத்துவரல்லாத குழுவினரை ஏன் அனுமதிப்பதில்லை என்பது குறித்து பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அறுவை சிகிச்சை அரங்குக்குள் ஏன் மருத்துவக் குழு அல்லாதோரை அனுமதிப்பதில்லை? இதற்குப் பின்

- சுத்தம் பேணல்
- உளவியல் நலன்
- மருத்துவ அறம்
ஆகிய மூன்று விசயங்கள் அடங்கியுள்ளன.

irfan health dr farook abdulla

முதலில் சுத்தம் பேணல் - அறுவை சிகிச்சை என்பது நமது உடலில் மயக்க மருந்து கொடுத்து வலியின்றி வெளிப்புறக் காயத்தை ஏற்படுத்தி உள்சென்று , தேவையான சிகிச்சையை அளிப்பதாகும். தொற்றுக்குள்ளான உறுப்பை அகற்றுதல், புற்றுக் கட்டிகளை நீக்குதல் , கருப்பைக்குள் இருக்கும் சிசுவை பாதுகாப்பாக வெளிக்கொணர்தல் உள்ளான பல அறுவை சிகிச்சைகள் உள்ளன.

அறுவை சிகிச்சை அரங்கு என்பது அதிகம் மெனக்கெட்டு கிருமித் தொற்று நீக்கம் செய்து எப்போதும் கிருமிகளற்ற சூழலில் வைத்திருக்க வேண்டிய இடமாகும். இதன்பொருட்டு அவ்வப்போது அபாயகரமான கிருமிகள் அறுவை அரங்கில் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதனை செய்து நுண்ணியிரியியல் தொற்று இல்லா சான்று பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

அறுவை அரங்குக்குள் உள் செல்ல அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் , மயக்கவியல் மருத்துவர், அறுவை சிகிச்சைக்கு உறுதுணையாக இருக்கும் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவர்கள் அனைவருமே அறுவை அரங்குக்கே உரிய ஆட்டோ க்ளேவ் முறையில் தொற்று நீக்கம் செய்யப்பட்ட உடைகளை அணிந்து கைகளை தொற்று நீக்கி திரவம் கொண்டு நன்றாகக் கழுவி கையுறை அணிந்து உள்ளே செல்ல வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு நாளும் அறுவை அரங்கமானது , முற்றிலுமாக புகை வடிவத்தில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இவ்வளவு கெடுபிடிகள் செய்வதால் தான். தற்கால அறுவை சிகிச்சைகளுக்குப் பின்பு தொற்று ஏற்படும் நிலை மிகவும் குறைந்திருக்கிறது.

இதன் காரணமாகவே அறுவை அரங்குகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக உள்ளன. இதைப் புரிந்து கொண்டு அந்த இடத்திற்குரிய மரியாதையை வழங்க வேண்டும்.

இரண்டாவது உளவியல் நலன் - அறுவை சிகிச்சை அரங்குக்குள் மருத்துவக் குழு அல்லாதோர் குறிப்பாக சிகிச்சை பெறுபவரின் நெருங்கிய உறவினர்கள் இருப்பது சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினருக்கு உளவியல் ரீதியாக அழுத்தத்தைத் தரும். கூடவே தாங்கள் அளிக்கும் சிகிச்சைத் திறனை சரியாக செய்ய வேண்டும் என்ற பதற்றமும் கூடவே ஏற்படும்.

மருத்துவ சிகிச்சைகள் குறிப்பாக அறுவை சிகிச்சைகள் நிலையில்லாமையைக் கொண்டவை. எப்போது நோயருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்பதை யாராலும் ஊகிக்க இயலாது. எனவே மருத்துவக் குழுவினரின் கவனம் அனைத்தும் சிகிச்சை அளிப்பதில் இருந்தால் தான் சிகிச்சை வெற்றி அடையும்.

அதை விடுத்து அவர்களையும் அவர்கள் செய்யும் சிகிச்சையையும் காணொளியாகக் காட்சிப்படுத்தும் போது கவனச் சிதறல் ஏற்பட்டு அதனால் நோயருக்கும் அவர் உயிருக்கும் உடலுக்கும் ஊறு நேரலாம். அடுத்து, அறுவை அரங்கில் நோயருடன் உடன் இருக்கும் உறவினரின் உளவியல் நலன் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.

நோயருக்கு மயக்க மருந்து வழங்கப்படுவதால் அவருக்கு சிகிச்சை குறித்த எந்த நினைவோ, வலியோ இல்லாமல் மயக்க நிலையில் இருப்பார். ஆனால் கூட நின்று வேடிக்கை பார்க்கும் நபருக்கு தனது நெருங்கிய உறவினருக்கு செய்யப்படும் சிகிச்சை அதீத பதற்றத்தை ஏற்படுத்தலாம். பலருக்கும் நெருங்கிய உறவினர்களின் ரத்தத்தைப் பார்த்தால் தலை சுற்றல் ஏற்பட்டு விழுந்து விடுவர். இது மருத்துவக் குழுவுக்கு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும்.

மூன்றாவது மருத்துவ அறம் - இங்கு இவையனைத்தும் காட்சிப்படுத்தப்படும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயரின் உளவியல் நிலை குறித்தும் சிந்திக்க வேண்டும். எந்த ஒரு நோயரையும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது அவர் காட்சிப்படுத்த விரும்புவாரா? என்றால் மாட்டார் என்பதே இயற்கை. காரணம் தான் மயக்க நிலையில் இருக்கும் போது எந்த நிலையில் இருப்போம். உடை சரியாக இருக்குமா? பேச்சு சரியாக இருக்குமா? மேலும் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பதற்றம் அச்சத்துடன் இருப்பார்.

இப்போது அவர் தன்னை வீடியோ எடுக்க இயற்கையாக சம்மதிப்பார் என்று யாரும் நம்ப இயலாது. மாறாக அவர் எளிதாக வசப்படுத்தும் கூடிய நிலையில் இருப்பாராயின் அவரை அனுமதிக்க வைத்து வீடியோ எடுக்கலாம். இத்தகைய நிலையை "வல்னரபிலிட்டி" (VULNERABILITY) என்கிறோம். அதாவது நமது மேலதிகாரி ஒருவிசயத்தைச் சொன்னால் அதை மறு பேச்சு பேசாமல் செய்கிறோம் அல்லவா? அதுதான் வல்னரிபிலிட்டி ஏழ்மை நிலையில் இருக்கும் நோயாளிகள், மனைவிகள் , பிள்ளைகள் , மாணவர்கள், மாணவிகள், சிறைவாசிகள், மனநலம் குன்றியோர், அநாதை இல்லங்களில் வசிப்போர், கீழ் நிலை ஊழியர்கள் இவர்கள் எல்லாம் வல்னரிபில் வகுப்புகளுக்குள் வரும் மக்களுக்கு உதாரணம்.

மேற்கூறியவர்களிம் ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அனுமதி என்பதை முறைப்படி பெறத் தேவையில்லை
அல்லது அனுமதி கேட்டாலும் முழுமையான விருப்பமே இல்லாவிடினும் அவர்களின் பிறரை நம்பி இருக்கும் நிலை கருதி உடனே கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கும் மனம் உண்டு. அந்த மனதுக்கும் எண்ணங்கள் உண்டு என்பதை மதிக்கும் போது
நாம் நிச்சயம் அவர்களை காட்சிப்படுத்த அதிகம் அதிகம் சிந்திப்போம். பலருக்கும் அறுவை சிகிச்சை என்பது நல்ல நினைவுகளாக இருப்பதில்லை. பல நேரம் இது போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் எனும் பெயரில் தொடர்ந்து பதற்றத்தையும் அச்சத்தையும் தூண்டும். இந்தக் காணொளியைக் காணும் போது இது போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட நபர்களுக்கும் பிடிஎஸ்டி தூண்டப்படலாம்.

இத்தகைய அறுவை சிகிச்சைகளை நோயர்களின் சொந்தங்களோ, அல்லது மருத்துவமனையோ காட்சிப்படுத்துவதும் அதை கல்விப் பயன்பாட்டுக்கல்லாத விசயங்களுக்கு ஒளிபரப்புவதும் மருத்துவ அறங்களுக்கு எதிரான செயலாக அமையக்கூடும். மேலும் இது ஊடக பிரபலத்துவத்துக்கும் லைக்ஸுக்கும் சப்ஸ்க்ரைபர்களுக்கும் ஏங்கும் சமூகத்தின் ஒரு சாராருக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+