வெயில் தாக்கத்தால் பெருகும் தோல் நோய்கள்.. எஸ்கேப் ஆவது எப்படி? சித்த மருத்துவத்தின் ஈஸி டிப்ஸ்
சென்னை: கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்தாலும், மீண்டும் பட்டையை கிளப்ப வெளியில் தயாராகதான் இருக்கிறது. எனவே இந்த வெயிலினால் ஏற்படும் தோல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள எளிய வழிமுறைகளை சித்த மருத்துவர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த வாரத்தின் பாதி நாட்கள் வெயில் கடுமையாக இருந்தது. மட்டுமல்லாது அக்னி வெயில் தொடங்கியதால் வெயிலுடன் சேர்த்து அனல் காற்றும் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. வெயிலோடு சேர்த்து புறஊதா கதிர்களும் அதிக அளவில் வீசுவதால் மக்களுக்கு அதிக தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அம்மை, முகப்பரு, அக்கி, கட்டி, தோல் அரிப்பு போன்ற பிரச்னைகள் அதிக வெயில் காரணமாக ஏற்படும் பாதிப்புகளாகும்.

இவை குறிப்பிட்ட சில நாட்களில் சரியாகிவிடும் என்றாலும் கூட அது ஏற்படுத்தும் பாதிப்புகள் நம்மை கடுப்படைய செய்துவிடும். எனவே இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க சில வீட்டு மருத்துவ முறை இருக்கிறது. இதில் முதல் மருத்துவம் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதுதான். தண்ணீர் உடலில் நீரின் அளவை சரியாக பராமரிப்பதுடன் உடலில் சேரும் தேவையற்ற கிருமிகளை சிறுநீர் வழியாக வெளியே கொண்டுவந்துவிடும். எனவே தொற்று பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல நீர் சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி, எலுமிச்சை சாறு, முலாம்பழம், திராட்சை, இளநீர், மோர் போன்ற நீர் சத்து அதிகம் இருக்கும் உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். இந்த காலத்தில் பலரும் அடிக்கிற வெயிலில் ஜில்லுன்னு தண்ணீர் குடிக்கனும்னு நினைக்கின்றனர். ஆனால் அது உடல் நலத்திற்கு உகந்தது கிடையாது என சித்த மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிகம் குளிரூட்டப்பட்ட தண்ணீரை விட சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரைதான் நம் உடல் அதிகம் எடுத்துக்கொள்ளும். நீர் எவ்வளவு அதிகம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு உடல் சூடு குறையும். எனவே தாகம் எடுக்கும்போது குளிரூட்டப்படாமல் இருக்கும் நீரை பருக வேண்டும்.
கோடை காலங்களில் ஏற்படும் மிகவும் பொதுவான நோய்தான் அம்மை நோய். நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்களிடம் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அம்மையில் சின்னம்மை மற்றும் தட்டம்மை என இரண்டு வகைகள் இருக்கின்றன. சின்னம்மை நோய் முதலில் வியர்குரு போல தொடங்கும். பின்னர் கொஞ்சம் பெரிய கொப்பளங்களாக மாறி அதில் நீர் கோர்த்துக்கொள்ளும். பின்னர் இதிலிருந்து நீர் வடிந்து கொப்பளங்கள் உதிர்ந்துவிடும். கொப்பளங்கள் இருந்த இடத்தில் தழும்புகள் இருக்கும். பின்னர் காலப்போக்கில் மறைந்துவிடும். பொதுவாக இந்த அம்மை பாதிப்பு ஒருமுறை வந்துவிட்டால் மீண்டும் அவர்களை தாக்காது.

இப்படி இருக்கையில் பலர் இந்த நோய் வந்துவிட்டால் பாதிக்கப்பட்டவரை சுற்றி வேப்பிலையை வைத்துவிட்டு சரியாகிவிடும் என்று கூறி அமைதியாகிவிடுகிறார்கள். வேப்பிலைக்கு வைரஸ்களை அழிக்கும் சக்தி கிடையாது. அம்மை என்பது வைரஸ்களால்தான் பரவுகிறது. எனவே வேப்பிலை மட்டுமே அம்மை நோயை குணப்படுத்திவிடாது. அம்மை வந்தால் கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். இதை நாம் காலங்காலமாக பின்பற்றி வந்திருக்கிறோம். இளநீர், மோர், நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள் ஆகியவற்றை கொடுப்பது இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவும்.
அதேபோல நோயின் தாக்கம் ஓரளவு குறைந்த பின்னர் எண்ணெய் சேர்க்காத வேகவைத்த உணவுகளை கொடுக்க வேண்டும். ஆயினும் பழச்சாறுகள், மோர், இளநீர் ஆகியவற்றை கொடுப்பதை நிறுத்திவிட கூடாது. நெல்லிக்காயை கொட்டை எடுத்துவிட்டு நன்றாக உலர்த்தி காய வைத்திருப்பது நெல்லி வற்றல் அல்லது நெல்லி முள்ளி என்று அழைப்பார்கள். இதனுடன் வேப்பிலையை சரிசமமாக அரைத்து வெண்ணெய் கலந்து உடலில் பூசினால் உடல் அரிப்பு நீங்கும். அதேபோல முருங்கை வேரை பாலில் கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வந்தால் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம். மேற்குறிப்பிட்ட மற்ற தோல் பிரச்னைகளுக்கும் வேப்பிலை சிறந்த தீர்வாக அமையும்.












Click it and Unblock the Notifications