மீன் சாப்பிடுறீங்க சரி.. அது செரிமானமாக எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? உண்ணும் உணவும் மருந்தும்!
சென்னை: உணவே மருந்து என்று ஒரு காலத்தில் மூதாதையர்கள் வாழ்ந்த நிலையில் இன்று மருந்தே உணவு என்று வாழக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். சாப்பிட்டது ஜீரணமாகவில்லை, வயிறு மந்தமாக உள்ளது, வயிற்றில் சாப்பிட இடமேயில்லை என்றெல்லாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களில் பலரும் கூற கேள்விப்பட்டிருப்போம்.
இதற்கு காரணம் ஒவ்வொரு உணவு வகையும் ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்தை செரிமானத்திற்காக எடுத்துக் கொள்வதேயாகும். அந்த வகையில் மனிதன் உட்கொள்ளும் இறைச்சி வகைகள் செரிமான ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் என்று பார்த்தால், மீன்களுக்கு (மீன்களின் வகைகளை பொறுத்து) 30 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை ஆகக் கூடுமாம்.

அதேபோல் ஆட்டுக்கறி உள்ளிட்ட இறைச்சிக்கு 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரையும் எடுத்துக்கொள்ளக் கூடுமாம். பால் மற்றும் பாலாடைக் கட்டிகள் வயிற்றில் செரிமானம் ஆவதற்கு 1 முதல் 2 மணி நேரம் வரை கூட எடுத்துக்கொள்ளுமாம்.
முட்டையை பொறுத்தவரை ஜீரணமாக குறைந்தது 30 நிமிடங்கள் ஆகக்கூடும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இறைச்சிகள், பால் பொருட்கள் செரிக்க இவ்வளவு நேரம் ஆகிறதே, காய்கறிகள் சாப்பிட்டால் அது செரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் எழும்.
பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகளான உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கேரட், பீட்ரூட், போன்ற கிழங்கு வகைகள் முழுமையாக செரிமானமாக 40 நிமிடங்கள் முதல் 50 நிமிடங்கள் ஆகுமாம். அதே வேளையில் கீரை, தக்காளி, உள்ளிட்ட இன்னும் ஒரு சில காய்கறிகள் 30 நிமிடங்களில் செரிமானமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. திட உணவுகளின் நிலை இது என்றால், திரவ உணவு வகைகளான பழச்சாறுகள் செரிமானம் ஆக எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்ற கேள்வி எழக்கூடும்.
பழச்சாறுகளை பொறுத்தவரை 15 முதல் 20 நிமிடங்களில் செரிமானம் ஆகிவிடும். இதனிடையே உடல் உழைப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு இறைச்சி முதல் காய்கறிகள் வரை இன்னும் விரைவாக செரிமானம் ஆகிவிடும்.












Click it and Unblock the Notifications