"டைம் பாம்.." முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடலாமா.. இதனால் மாரடைப்பு ஏற்படுமா! ! மருத்துவர் விளக்கம்
சென்னை: முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடுவதால் மாரடைப்பு வரும் ஆபத்து அதிகரிப்பதாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், இது உண்மை தானா.. முட்டையின் மஞ்சள் கருவில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்
இந்த நவீனக் காலத்தில் நமது வாழ்க்கை முறை பெரியளவில் மாறியிருக்கிறது. பெரும்பாலான நேரம் நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணிபுரிகிறோம். தினசரி 8 முதல் 12 மணி நேரம் வரை கூட ஒரே இடத்தில் உட்கார வேண்டிய சூழல் இருக்கிறது.

இப்படி ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடல் உழைப்பு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுகிறது. இதனால் உடல் பருமன் என்பது இங்கு மிக முக்கிய பிரச்சினையாகவே மாறிவிட்டது.
உடல் பிரச்சினைகள்: இப்போது இளைஞர்கள் பலரையும் பார்க்கும் போது அவர்கள் ஓவர் வெயிட் எனப்படும் உடல் பருமனுடன் இருக்கிறார்கள். உடன் பருமன் என்பது மோசமான பிரச்சினைகளை நமக்கு ஏற்படுத்தும். குறிப்பாக இதயம் சார்ந்த பாதிப்புகள், மாரடைப்பு ஆகியவை ஏற்படும் ஆபத்துகள் உடல் பருமனால் அதிகரிக்கும் என்றே எச்சரிக்கை விடுக்கிறார்கள். இதனால் இப்போது நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் பார்த்துப் பார்த்துச் சாப்பிட வேண்டி இருக்கிறது.
அதேநேரம் சில வகை உணவுகள் நல்லது தான் என்றாலும், இணையத்தில் அது குறித்துப் பரவும் தவறான தகவல்களால் அதையும் நாம் தவிர்க்க ஆரம்பித்துவிடுவோம். அப்படித்தான் கடந்த சில காலமாகவே முட்டையைச் சாப்பிடும் போது அதன் மஞ்சள் கருவை தவிர்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் காரணமாக அதைச் சாப்பிட வேண்டாம் எனச் சிலர் சொல்லவே இப்போது பலரும் அதைச் சாப்பிடுவதில்லை.
முட்டை: சிலர் ஒட்டுமொத்தமாகவே முட்டையைத் தவிர்க்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது.. முட்டையைச் சாப்பிடுவது அந்தளவுக்கு ஆபத்தானதா என யாரும் தேடிப் பார்ப்பதில்லை. இதனிடையே இது குறித்து பிரபல மருத்துவர் பால் மாணிக்கம் தனது விளக்கம் அளித்துள்ளார்.
என்ன சொல்கிறார்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "ஒரு முட்டையில் இருந்து நமக்கு 6 கிராம் வரை புரோட்டீன் எனப்படும் புரதச் சத்து கிடைக்கிறது.. இருப்பினும், இப்போது பொதுமக்கள் பலரும் முட்டையைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் கொலஸ்ட்ரால் நமது உடலுக்கு ஆபத்தானது என்று பரவும் தகவலே இதற்குக் காரணம்..
கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று என்னிடம் கேட்டால்.. கோழி முட்டையின் மஞ்சள் கரு குறித்த போலி செய்தியே முதலில் வந்தது என்று சொல்வேன்.
ஆபத்து இல்லை: இது தொடர்பாக 1.78 லட்சம் பேரிடம் மூன்று மிகப் பெரிய ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் முட்டையின் மஞ்சள் கருவைத் தினசரி ஒன்று எடுத்துக் கொள்வதால் எந்தவொரு ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பது தெரிய வருகிறது. இதனால் மாரடைப்பு அல்லது உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் ஒன்றும் அதிகரிப்பதில்லை.

மக்கள் பலரும் முட்டையைக் கொடுத்தால், வெடிகுண்டை வெளியே எடுப்பது போல.. அதில் இருக்கும் வெள்ளைக் கருவை எடுக்கிறார்கள். இந்த சிறிய மஞ்சள் கரு நமக்கு எந்தவொரு மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. தினசரி ஒரு மஞ்சள் கருவைச் சாப்பிடுவதால் உண்மையில் எந்தவொரு பாதிப்பு ஏற்படாது.
இதில் பிரச்சினை என்னவென்றால் இந்த முட்டையை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் அதிக நெய், அதிக எண்ணெய் ஆகியவற்றை வைத்து முட்டையைச் சமைக்கிறார்கள். பிரச்சினை இங்கு தான் வருகிறது" என்று கூறுகிறார்.












Click it and Unblock the Notifications