செம்பருத்தி டீ விவகாரம்! முட்டாள்களுடன் வாக்குவாதம் வேண்டாம்! டாக்டரை விமர்சித்தாரா நடிகை நயன்தாரா?
சென்னை: செம்பருத்தி தேநீர் குறித்து நடிகை நயன்தாராவின் கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த கல்லீரல் சிகிச்சை நிபுணரை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் மறைமுகமாக அவர் விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதை எனது உணவுத் திட்டத்தில் ஒரு பகுதியாகவே மாற்றியவர் ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால். இது நீண்ட காலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளதால் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவிகரமாக இருக்கும். இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
எனவே இதை முகப்பரு உள்ளிட்ட சரும பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தலாம். இதில் வைட்டமின்களும் அதிகம் இருக்கிறது. செம்பருத்தி தேநீர் மழைக்காலத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலையில் வைத்திருக்க இது உதவும். ஆன்டிபாக்டீரியல் இருப்பதால் பருவமழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது என நயன்தாரா பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது இந்த பதிவை கல்லீரல் சிகிச்சை நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்பிஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் , பிரபல நடிகை நயன்தாரா, சமந்தாவை விட இரு மடங்கு பாலோயர்களை கொண்டிருக்கிறார். கிட்டதட்ட 8.7 மில்லியன் பேரை செம்பருத்தி டீ குடிக்க நயன்தாரா கோரியுள்ளார்.
அதிலும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பாக்டீரியா தொற்று, முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு செம்பருத்தி டீ பயனாக இருக்கும் என அவர் கூறியிருப்பது மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகவில்லை. அதுபோல் நயன்தாராவின் இந்த பதிவு அவரது பிரபல ஊட்டச்சத்து நிபுணருக்கான விளம்பரம் போல் தெரிகிறது.
எதை பற்றியும் தெரியாமல் தவறான தகவல்களால் தனது பாலோயர்களை தவறாக வழிநடத்துகிறார். செம்பருத்தி டீயின் நன்மைகள் குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அதனை யாரும் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டாம் என விமர்சித்திருந்தார்.
இதையடுத்து நடிகை நயன்தாரா அந்த போஸ்ட்டை டெலிட் செய்துவிட்ட போதிலும் தான் தவறான தகவலை கொடுத்ததற்கு அவர் எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் மருத்துவர் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார். பொது மக்களின் ஆரோக்கியத்தின் மீது இவர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது போல் இருந்தது இவருடைய பதிவு.
இது போல் பிரபலங்கள் இப்படி ஆதாரமே இல்லாத தகவல்களை தெரிவிப்பதால் அதை தடுக்க அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் முட்டாள்களுடன் ஒரு போதும் வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்கள் உங்களை தங்கள் நிலைக்கு இழுத்து விடுவார்கள். தங்கள் அனுபவங்களின் மூலம் உங்களை தோற்கடித்துவிடுவார்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நடிகை நயன்தாரா, டாக்டருக்குத்தான் மறைமுகமாக பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
அது போல் இந்த செம்பருத்தி டீயை எப்படி தயாரிப்பது என்பது குறித்து தனது ஊட்டச்சத்து நிபுணரிடம் கேளுங்கள் என்றும் நடிகை நயன்தாரா தெரிவித்திருந்தார். அதன்படி அவருடைய ஊட்டச்சத்து நிபுணரும் அந்த டீ ரெசிபியை பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications