சேற்றுப் புண்ணுக்கு சரியான மருந்து இதுவே.. வெற்றி தரும் வேப்பிலை.. சேற்றுப்புண்களுக்கு சிறந்த மூலிகை
சென்னை: சேற்றுப்புண்கள் ஏன் வருகின்றன தெரியுமா? யார் யாருக்கு சேற்றுப்புண்கள் பாதிப்பு விரைந்து தாக்கும்? இதற்கு எளிய மருந்துகள் உள்ளனவா? சேற்றுப்புண்களிலிருந்து நம்மை காத்து கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வு பகுதியில் ஏற்படுகிறது சேற்றுப்புண்கள்.. இது "அத்தலட்ஸ் புண்" அதாவது"டீனியா பெடிஸ்" என்ற பூஞ்சை வகை நோயாகும்..

என்ன காரணம்: சேறு, நீண்ட நாள் தேங்கிய தண்ணீர், கழிவு நீர் போன்றவற்றில் நுண்கிருமிகள் உருவாகி, இதுவே தொற்றினால் கால்களில் புண்ணாக உருவெடுத்து விடுகிறது.. இந்த புண்களையே சேற்றுப்புண் என்று சொல்கிறோம்.. வியர்வை அதிகமாகிவிட்டால், இந்த சேற்றுப்புண்கள் வேகமாக வளர்ந்துவிடும்.
அதேபோல, நம்முடைய கால்களை சரியாக சுத்தப்படுத்தாமல் விட்டால், சேற்றுப்புண் வரும். இதுபோன்ற புண்கள், விரல்களுக்கு நடுவில் மட்டுமல்லாமல், பாதங்களிலும் பாதிப்பை தந்துவிடும்.. இதேபோல, வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும் மழைக்காலங்களில் செருப்பு இல்லாமல் நடப்பவர்களுக்கும் இந்த புண்கள் வந்துவிடும். முதலில் தோல் உரிய ஆரம்பித்து, பிறகு புண்ணாக மாறும்.
கிளிஞ்சல்: இந்த சேற்றுப்புண்களை எளிய முறையில் குணப்படுத்தலாம். சேற்றுப்புண் பாதிப்பு இருந்தால் காலை மற்றும் இரவில் கால்களை வெந்நீரில் கழுவ வேண்டும். பிறகு அமிர்த மெழுகு, கிளிஞ்சல் மெழுகு, வங்க வெண்ணெய் இவைகளில் ஏதாவது ஒன்றை பூசிவந்தால் புண்கள் ஆறும்.. அதேபோல, கடுக்காய், மாசிக்காய், தான்றிக்காய் போன்ற மூலிகைகளை பவுடர் செய்து, இந்த புண்களை கழுவலாம்.. காரணம், இவையெல்லாம் துவர்ப்பு நிறைந்த மூலிகையாகும்.
அதேபோல, வேப்பந்தளிர்களை நீரில் அவித்து, அந்த தண்ணீரை கொண்டும் சேற்றுப்புண்களை கழுவலாம்.. ஒரு கைப்பிடி வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து பூசலாம்.. வேப்பெண்ணெயைக் காய்ச்சி புண்ணில் பூசலாம்.. அறுகம்புல்லுடன் மஞ்சளை சேர்த்து அரைத்தும் சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூசினால், புண்கள் ஆற துவங்கும். மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்தும் பூசலாம்.
எலுமிச்சம் பழம்: அதேபோல, சுடுநீரில் உப்பு அல்லது எலுமிச்சை பழச்சாறு கலந்தும் சேற்றுப்புண்களை கழுவலாம். அரிசியை அலசும் தண்ணீரை கொதிக்க வைத்தும், பாதங்களை கழுவி, ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளை சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவி குளித்தாலும் சேற்றுப்புண் அண்டாது..
குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் வந்தால் வெண்ணெயை தடவினால், எரிச்சல் அடங்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சேற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications