சமூக வலைத்தள பயன்பாட்டை குறைத்தால்.. இப்படி எல்லாம் நன்மை இருக்கா.. ஆய்வு என்ன சொல்லிருக்கு பாருங்க
சென்னை: சமூக வலைத்தள பயன்பாடுகளை மக்கள் குறைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சி பல்ககலைக்கழக ஆய்வுக் குழு சமூக வலைத்தள பயன்பாடு தொடர்பான இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு பெருகிவிட்டது.
பேஸ்புக், இன்ஸ்டாகிரம், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்று சொல்லிவிடலாம். நாள்தோறும் பெரும்பாலான மக்கள் தூங்கும் முன் கடைசியாக பார்ப்பதும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களாகத்தான் இருக்கும்.

சமூக வலைத்தளம்
அதேபோல், தூங்கி எழுந்ததும் முதலில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத்தான் பலரும் தேடுவதுண்டு.. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் முதல் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைத்து தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தான் அதிகம் நேரம் செலவிடுகின்றனர். செல்போனில் பேசுவதற்கு செலவிடும் நேரத்தை விட சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரம் தான் பலருக்கும் அதிகமாக இருக்கிறது.

செல்போனில் மூழ்கி கிடப்பதால்
வெளியில் எங்காவது சென்றால் அதைப் பற்றிய அப்டேட்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது.. போட்டோக்கள், வீடியோக்களை எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அப்டேட் செய்வது, வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது படு பிசியாக மாறி விடுகிறார்கள். இப்படியாக பல மணி நேரம் செல்போனில் மூழ்கி கிடப்பதால் மன ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது.

15 நிமிடங்கள் குறைத்தால்
இந்த நிலையில், மக்கள் சமூக வலைத்தள பயன்பாடுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சி பல்ககலைக்கழக ஆய்வுக் குழு சமூக வலைத்தள பயன்பாடு தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளது. 20 வயது முதல் 25 வயதுக்குள் உள்பட்ட இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு குழுக்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சமூக வலைத்தள பயன்பாட்டை 15 நிமிடங்கள் குறைத்து கொண்டவர்கள் மற்றும் வழக்கம் போல் பயன்படுத்துவர்களுக்கு வந்த முடிவுகள் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடல் ரீதியாக நல்ல முன்னேற்றம்
இந்த ஆய்வின் படி மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 15 நிமிடங்கள் குறைத்துக்கொண்டவர்களுக்கு உடல் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது, சமூக வலைத்தள பயன்பாட்டை குறைத்துக் கொண்டவர்களுக்கு 15 சதவீதம் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாம். அதேபோல் 50 சதவீதம் அளவிற்கு தூக்கத்தின் தரம் அதிகரித்துள்ளதோடு 30 சதவீதம் மன அழுத்தம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

பேராசிரியர் பில் ரீட்
இந்த ஆய்வு பிகேவியர் சயின்ஸ் ஜர்னல் ஆஃப் டெக்னாலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வை நடத்திய பல்கலைக்கழக பேராசிரியர் பில் ரீட் கூறுகையில், "மக்கள் சமூக வலைத்தள பயன்பாட்டை குறைக்கும் போது அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வுக்கான நன்மைகள் உள்பட பல வழிகளில் அவர்களின் வாழ்க்கை மேம்படும் என்பதை ஆய்வு காட்டுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications