டீன் ஏஜ் பெண்களிடையே 2 மடங்கு அதிகரித்த புகை பிடிக்கும் பழக்கம்! "ஆபத்து.." எச்சரிக்கும் வல்லுநர்கள்
டெல்லி: இந்தியாவில் இளம்பெண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ரிப்போர்ட் ஒன்று வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியாவில் தற்போதுள்ள புகையிலை பயன்பாடு குறித்து ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது நாடு முழுக்க புகையிலை நுகர்வு குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது நல்ல செய்தியாகும்.

டீன் ஏஜ் பெண்கள்: அதேநேரம் டீன் ஏஜ் பெண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளதாக பகீர் தகவல் அதில் கூறப்பட்டுள்ளது. அதிலும் வயதான பெண்களுடன் ஒப்பிடும் போது டீன் ஏஜ் பெண்களிடையே தான் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகவே டீன் ஏஜ் பருவத்தினரிடையே புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்தே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பார்க்கும் போது டீன் ஏஜ் பெண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் 3.8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த 2009இல் இது 2.4ஆக இருந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து இப்போது அது 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெண்களிடையே தான் அதிகம்: டீன் ஏஜ் சிறுவர்கள் மத்தியிலும் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்ற போதிலும், அது டீன் ஏஜ் பெண்களிடையே அதிகரித்த அளவுக்கு உயரவில்லை.. 10 ஆண்டுகளில் சிறுவர்களிடையே புகைபிடித்தல் 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேநேரம் பெரியவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது.. அதிலும் குறிப்பாகப் பெண்களைக் காட்டிலும் ஆண்களிடையே புகை பிடித்தல் பழக்கம் அதிகம் குறைந்துள்ளது. புகை பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே 2.2 சதவீதம் குறைந்துள்ள நிலையில், பெண்களிடையே அது 0.4 சதவீதம் வரை குறைந்துள்ளது..
என்ன காரணம்: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது டீன் ஏஜ் பருவத்தினரிடையே, அதிலும் குறிப்பாக டீன் ஏஜ் பெண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. டீன் ஏஜ் சிறுமிகள் வேகமாக முதிர்ச்சியடைவதே இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், புகை பிடிப்பது கெத்து என்று டீன் ஏஜ் பெண்கள் நினைக்கும் போக்கு அதிகரித்துள்ளதும் இதற்கு முக்கிய காரணமாகும். உடன் இருப்பவர்கள் வலியுறுத்துவது, பசியைச் சமாளிக்கவும் பெண்கள் அதிகளவில் புகைபிடிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஓடிடியும் முக்கிய காரணம்: இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "இதுவரை புகையிலை நிறுவனங்கள் ஆண்களை மட்டுமே குறிவைத்து மார்கெட்டிங் செய்து வந்தனர். பெண்கள் அவர்கள் டார்கெட்டாக இருந்ததே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம் நாகரீகமானது என்று பெண்கள் பலரும் கருதுவதே இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், சினிமாக்களில் புகைபிடிக்கும் காட்சிகள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
2012ல் சினிமாக்களில் புகைபிடிக்கும் காட்சிகள் தோன்றும் போது வார்னிங் மெசேஜ் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு புகை பிடிக்கும் பழக்கம் கணிசமாகக் குறைந்து இருந்தது. இருப்பினும், ஓடிடி தளங்கள் வந்தவுடன் புகை பிடித்தலுக்கான எச்சரிக்கை மெசேஜ் இல்லாமல் காட்சிகள் வந்தன. அதேபோல புகை பிடிக்கும் பழக்கமும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் பின்னரே ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது" என்றார்.
என்ன பாதிப்புகள்: புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே சுவாச நோய்கள், நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. மேலும், கருவுறுதலையும் இது சிக்கலான ஒன்றாக மாற்றுகிறது. இது ஆண்- பெண் என இரு பாலருக்கும் ஏற்படும் பாதிப்பாகும். இவை தவிரப் பெண்களுக்குக் குழந்தை பிறக்கும் போது இது பல வித சிக்கல்களை ஏற்படுத்தலாம். சேதமடைந்த நுரையீரல், பிறப்பு குறைபாடுகளையும் இது ஏற்படுத்தும். மேலும், புகைபிடித்தல் பிரசவத்தின் போது ரத்தப்போக்கையும் அதிகரிக்கும்.
டீன் ஏஜ் பருவத்தில் சிறுவன் மற்றும் சிறுமிகள் என இரு தரப்பினருக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள் குறைந்து வருகிறது. டீன் ஏஜ் சிறுமிகளிடையே இது 7.4 சதவீதமாக இருக்கும் நிலையில், டீன் ஏஜ் சிறுவர்களிடையே இது 9.4 சதவீதமாக இருக்கிறது. அதாவது டீன் ஏஜ் பருவத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு வேகமாக அடிமையாகி வருகிறார்கள். இதைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை.. இல்லையென்றால் அடுத்த தலைமுறையினர் பேரழிவை எதிர்கொள்வது நிச்சயம்.












Click it and Unblock the Notifications