தூக்கத்தில் திடீரென கொட்டிய வியர்வை.. அடுத்து துடிதுடித்து உயிரிழந்த பெண்.. மோசமான பாதிப்பாம்! கவனம்
லண்டன்: வடக்கு வேல்ஸ் பகுதியில் திடீரென தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு அதீத வியர்வை ஏற்பட்டுள்ளது. அப்போது சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பெண்ணுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது.. அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்துத் தெளிவாகப் பார்க்கலாம்.
பிரிட்டன் வடக்கு வேல்ஸ் சவுத்போர்ட்டைச் சேர்ந்தவர் ஆஷ்லீக் டி-ஆண்ட்ரேட். 31 வயதான இவருக்குத் திருமணமாகவில்லை. இருப்பினும், இவருக்கு ஏற்கனவே மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன.
இதற்கிடையே அவர் தனது பாய் பிரெண்ட் உடன் தனது திருமணத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு இன்னும் சில காலத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில், அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

வியர்வை: இத்தனைக்கும் அவரது உடல்நிலை நன்றாகவே இருந்துள்ளது. ஒரு சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளார். சமீபத்தில் விடுமுறை நாட்களைக் கழிக்க வெளியே சென்று வந்துள்ளார். அதன் பின்னர் ஏதோ புழுக்கமாக இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் அப்படிச் சொல்லி சில மணி நேரத்தில் எத்திப்பாராத விதமாக அவர் உயிரிழந்தார்.
விடுமுறையில் பூங்கா சென்று திரும்பிய அவர், படுக்கைக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டியுள்ளது. அப்போது திடீரென அவருக்கு உடல்நிலை மோசமாகவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
மூளைக் காய்ச்சல்: அப்போது, மருத்துவமனையிலேயே அந்த பெண்ணுக்குப் பல முறை வலிப்பும் மூளையில் ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு meningitis எனப்படும் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அந்த பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மூளைக்காய்ச்சல் என்பது முதுகெலும்பு மற்றும் மூளையை உள்ளடக்கிய பாதுகாப்பு சவ்வுகளின் வீக்கத்தைக் குறிக்கிறது. மூளைக்காய்ச்சல் ஏற்படும்போது, முதுகெலும்பு மற்றும் மூளையைச் சுற்றியுள்ள திரவத்தில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று வீக்கத்தைத் தூண்டுகிறது. இது சில குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் புற்றுநோய் காரணமாகவும் ஏற்படலாம்.
அறிகுறிகள்: மூளைக்காய்ச்சல் ஏற்பட்டால் முதலில் நமது உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும். அதேபோல உடலில் ஏதோ ஒரு மாதிரியான உணர்வு ஏற்படும். தலைவலி, வலிப்பு, கை கால்கள் குளிர்வடையும், அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாமல் போவது, தடிப்புகள் உள்ளிட்டவை ஏற்படும். மேலும், மயக்கம், எரிச்சல், எனர்ஜி இல்லாமல் இருப்பதைப் போன்ற உணர்வு, கழுத்தில் வீக்கம் உள்ளிட்டவையும் ஏற்படும்.
குறிப்பாகச் சிறிய, சிவப்பு நிறத்தில் தோன்றும் சொறி - மூளைக்காய்ச்சலின் முக்கிய அறிகுறியாக இருக்கும். முதலில் ஒரு இடத்தில் மட்டும் தோன்றும் இது அதன் பின்னர் உடல் முழுக்க பரவும்.
சொறி இருக்கும் தோலுக்கு எதிராகக் கண்ணாடியை அழுத்தியும் அது மறையவில்லை என்றால், ரத்தத்தில் விஷம் ஏறியதன் அறிகுறியாகும். இதுபோன்ற அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக நாம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் முதலில் நாம் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications