Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1996-ல் பிரதமர் பதவிக்கான பட்டியலில் கருணாநிதி...மாஜி பிரதமர் தேவகவுடா சுயசரிதை சொல்லும் சரித்திரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1996-ம் ஆண்டு ஐக்கிய முன்னணியின் பிரதமர்கள் பட்டியலில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரும் இடம்பெற்றிருந்ததாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் சுயசரிதை புத்தகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

1996-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்த தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கின. இதில் திமுக, வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம், சிபிஎம், முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி, மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த கூட்டணியின் சார்பில் பிரதமராக தேவகவுடா தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு அப்போது காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. தேவகவுடா 10 மாதங்கள்தான் ஆட்சியில் இருந்தார். காங்கிரஸ் தமது ஆதரவை வாபஸ் வாங்கியதால் தேவகவுடா ராஜினாமா செய்ய நேரிட்டது. இது அப்போதைய வரலாறு.

தற்போது Furrows in a Field: The Unexplored Life of H.D. Deve Gowda" என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் சுகாதா ஶ்ரீனிவாசராஜூ எழுதியுள்ள தேவகவுடாவின் சுயசரிதையானது ஐக்கிய முன்னணியில் பிரதமர் வேட்பாளர்களாக யாரெல்லாம் முன்னிறுத்தப்பட்டனர்; எப்படி தேவகவுடா பிரதமரானார்? தேவகவுடாவின் ஆட்சி எப்படி கவிழ்க்கப்பட்டது என்பது உள்ளிட்ட ஏராளமான வரலாற்று தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் விவரம்:

 How Deve Gowda became Prime Minsiter and lost his Post within 10 Months?

பிரதமர் வேட்பாளர் பட்டியலில் கருணாநிதி

1996-ல் ஐக்கிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர்களில் முதல் சாய்ஸாக இருந்தவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அடுத்ததாக ஜோதிபாசு, கர்நாடகா முதல்வராக இருந்த தேவகவுடா, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, ஆந்திர முதல்வராக சந்திர பாபு நாயுடு ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. முதலில் வி.பி.சிங்கை பிரதமராக்குகிற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. டெல்லியில் ராஜாஜி மார்க்கில் வி.பி.சிங் இல்லத்துக்கு திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த முரசொலி மாறன் சென்றார். அப்போது தேவகவுடா உள்ளிட்ட ஐக்கிய முன்னணியின் மூத்த தலைவர்கள் அங்கே இருந்தனர். முரசொலி மாறனை தமது வீட்டின் முற்றத்துக்கு வந்து வரவழைத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் வி.பி.சிங். ஆனால் 2 மணிநேரம் கழித்து வி.பி.சிங்கின் மனைவி வெளியே வந்து, ஐக்கிய முன்னணி தலைவர்களிடம் வி.பி.சிங். பின்பக்க கதவு வழியாக வேறு எங்கோ சென்றுவிட்டதாக கூறினார். அதாவது வி.பி.சிங் தாம் பிரதமராக விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தி இருந்தார். ஐக்கிய முன்னணியின் விருப்பத்தை அவர் ஏற்கவில்லை என தெரிந்து கொண்டு அங்கே காத்திருந்த தலைவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

ஜோதிபாசுக்கு சிபிஎம் மறுப்பு

இதன்பின்னரே ஜோதிபாசுவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சி.பி.எம் கட்சி இதை நிராகரித்தது. லாலு பிரசாத் யாதவ், சுர்ஜித்சிங் முன்னிலையில் தேவகவுடாவை அழைத்தார் ஜோதிபாசு. அப்போதைய சி.பி.எம். (மார்க்சிஸ்ட் கட்சி) பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை ஐக்கிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக்க தீவிரம் காட்டினார். ஆனால் சி.பி.எம். கட்சி, ஜோதிபாசு பிரதமராவதற்கு அனுமதி அளிக்கவில்லை. பின்னாளில் அதனைத்தான் வரலாற்றுப் பிழை என ஜோதிபாசு சுட்டிக் காட்டி இருந்தார்.

தேகவுடா பிரதமரானது எப்படி?

பிறகு ஜோதிபாசு தேவகவுடாவை அழைத்திருந்தார். இந்த சந்திப்பின் போது லாலு பிரசாத் யாதவ், சுர்ஜித் சிங் ஆகியோர் உடனிருந்தனர். இச்சந்திப்பில் தேவகவுடாவை பிரதமராக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் தேவகவுடாவோ 2 ஆண்டுகளுக்கும் குறைவாக தாம் பிரதமர் பதவியில் இருக்க விரும்பவில்லை என கூறினார். ஜோதிபாசுவிடம் தேவகவுடா, "என்னுடைய அரசியல் எதிர்காலம் பாதியிலேயே முடிந்து போய்விடும். நீண்டகாலத்துக்கு ஆட்சியை நடத்த காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்பு தராது. நீங்கள்தான் பிரதமராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் கர்நாடகாவிலேயே நீண்டகாலம் முதல்வராக இருக்க விரும்புகிறேன். எனக்கு இந்தி மொழியும் தெரியாது. எங்களைவிட மூத்தவர் நீங்கள்.. உங்களை கெஞ்சி கேட்கிறேன்" எனக் கூறியதுடன் ஜோதிபாசுவின் காலை தொட்டு வணங்கி, எங்கள் வேண்டுகோளை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் தேவகவுடா. இதற்கு பதிலளித்த ஜோதிபாசுவோ, மிஸ்டர் கவுடா, மக்களிடம் போய் வாஜ்பாய்க்கு மாற்றாக மதச்சார்பின்மை அணி எதுவும் இல்லை என்று நாட்டு மக்களிடம் நான் சொல்ல வேண்டுமா? மதச்சார்பற்ற அணியின் பிரதமர் என்று நாளிதழ்களில் நாம் விளம்பரம் செய்ய வேண்டாமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பிறகே பிரதமர் பதவியை ஏற்க ஒப்புக் கொண்டார் தேவகவுடா.

சீதாராம் கேசரிக்கு எதிராக குழிபறிப்பு

தேவகவுடா பிரதமராக பதவியேற்றாலும் காங்கிரஸ் ஆதரவு குறித்த அச்சம் அவருக்கு இருக்கவே செய்தது. இந்த அச்சம் உண்மை என்பதைத்தான் 10 மாதங்களிலேயே தேவகவுடா அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அப்போதைய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்ததன் மூலம் உறுதியானது. சரி தேவகவுடா அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் அப்போது ஏன் வாபஸ் பெற்றது? காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சீதாராம் கேசரி நீக்கப்பட வேண்டும் என்பதில் அக்கட்சியின் சீனியர்கள் மும்முரமாக இருந்தனர். அப்போது காங்கிரஸ் உட்கட்சி தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட் தேவகவுடாவை சந்தித்து, சீதாராம் கேசரி மீதான பழைய கொலை வழக்கு ஒன்றை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 1993-ம் ஆண்டு சீதாராம் கேசரியின் மருத்துவராக இருந்த சுரேந்திர தன்வார் கொலை செய்யப்பட்டிருந்தார். அது தொடர்பான வழக்கைத் தூசு தட்ட வேண்டும் என்று நோட் எழுதிக் கொடுத்தார் ராஜேஷ் பைலட். ஆனால் பைல்ட் வெளியே சென்ற போது அந்த குறிப்பை அழித்துவிட்டார் தேவகவுடா. அப்போது இந்த வழக்கு தொடர்பாக கேசரியை விசாரிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

பேரம் பேசிய சீதாராம் கேசரி

இந்த பின்னணியில் 1997-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற சீதாராம் கேசரி, தேவகவுடா அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தார். இதனால் ஏப்ரல் 9-ந் தேதி நாடாளுமன்றத்தில் தேவகவுடா அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. அதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக சீதாராம் கேசரியின் சார்பாக ஆர்.கே.தவான், தேவகவுடாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, சீதாராம் கேசரியை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுத்ததற்காக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் இனிமேல் சீதாராம் கேசரியை கலந்து ஆலோசித்துதான் முடிவெடுப்பேன் என உறுதிதர வேண்டும் என தேவகவுடாவிடம் ஆர்.கே.தவான் பேரம் பேசினார். இதனை ஏற்றுக் கொண்டால் ஜனாதிபதியிடம் கொடுத்த ஆதரவு வாபஸ் கடிதத்தை திரும்பப் பெற சீதாராம் கேசரி தயாராக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தேவகவுடாவோ, பொதுவெளியில் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. அதேநேரத்தில் பொதுவெளியில் சீதாராம் கேசரியுடன் கலந்து ஆலோசிக்கிறேன் என்கிற உறுதிமொழியைத் தர முடியும் என கூறியிருக்கிறார். இதை சீதாராம் கேசரி ஏற்க மறுத்துவிட்டார்.

தேவகவுடாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாஜக

நாடாளுமன்றத்தில் தேவகவுடா நம்பிக்கை வாக்கு கோரிய போது, எங்களது ஆதரவை ஏற்றுக் கொண்டால் உங்களது அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறோம்.. நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவராக இருந்த ஜஸ்வந்த்சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த ஶ்ரீகாந்த் குமார் ஜெனா மூலமாக துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்தார். அது வாஜ்பாய் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை தேவகவுடா ஏற்கவில்லை. அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகவும் நேரிட்டது. இவ்வாறு Furrows in a Field: The Unexplored Life of H.D. Deve Gowda" என்கிற தேவகவுடாவின் சுயசரிதை விவரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+