உலகின் அதிபயங்கர நகரம் கராச்சி… ஆய்வு தகவல்
கராச்சி: பாகிஸ்தானின் உள்ள கராச்சி, உலகின், "அதிபயங்கர நகரம்' என்ற பெயரை பெற்றுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து, தனியார் பத்திரிகை நிறுவனம், ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சி மக்களின் உயிருக்கு ஆபத்தான, "அதிபயங்கர நகரம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வர்த்தக நகரம்
பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால், வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். 2000 முதல், 2010ம் ஆண்டு வரை, கராச்சி நகரின் மக்கள் தொகை, 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் குற்றங்கள்
இதனால் வர்த்தகநகரமான கராச்சியில் குற்றச்சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டு சதியால், மக்கள் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றனர்.

அதிகரிக்கும் மோதல்
பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரை கொடுமைப்படுத்துவது அதிகரித்துள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளாக, கராச்சியில், ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே, பலத்த மோதல் நடைபெற்று வருகிறது.

அதிக கொலைகள்
உலகிலேயே, கராச்சியில் தான், மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர். கராச்சியில், 2011ம் ஆண்டு, 1,723 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2012ல் இந்த எண்ணிக்கை, 2,000ஐ தாண்டி விட்டது.

ரூ.300 கோடி
நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கறுப்பு பணம்
உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

அதிபயங்கர நகரம்
தலிபான் பயங்கரவாதிகள், பணம் மற்றும் நகைகளை சூறையாட, கராச்சி நகரை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. அவர்களால், நகரில் அதிகப்படியான கொலைகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், உலகின், "அதிபயங்கர நகரம்' என்ற பெயரை, கராச்சி பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications