அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை.. விண்ணப்பித்தவர்களுக்கு ஜாக்பாட்.. இன்றே கடைசி நாள்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு இதுவரை விண்ணப்பித்த எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது விண்ணப்பித்த மூன்றில் ஒருவருக்கு பணி கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 டிரைவருடன் கூடிய கண்டக்டர் (டி.சி.சி.) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்..
தமிழ்நாடு முழுவதும் சென்னை, எஸ்இடிசி, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், மதுரை மற்றும் சேலம் என 8 போக்குவரத்து மண்டலங்கள் இருக்கின்றன. இதில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. எஸ்இடிசி என அழைக்கப்படும் விரைவு பேருந்து போக்குவரத்துக்கழகம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. மற்ற கோட்டங்கள் அந்த கோட்டங்களில் உள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகளை இயக்குவதுடன், அந்த ஊர்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் பேருந்துகளை இயக்கி வருகின்றன.

ஆனால் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் ஏராளமான பேருந்துகளில் பணியிடங்கள் பல ஆண்டுகளாக சரிவரநிரப்பப்படவில்லை.. ஏராளமான காலியிடங்கள் உள்ளன. சென்னை பொறுத்தவரை தற்காலிக ஓட்டுநர்களை வைத்தும், ஒப்பந்த அடிப்படையிலும் ஆட்களை தேர்வு செய்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. மற்ற பகுதிகளிலும் இதே நிலை தான் பல இடங்களில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊழியர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 டிரைவருடன் கூடிய கண்டக்டர் (டி.சி.சி.) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த மாதம் 21-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுனர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத அனுபவம், முதலுதவிச் சான்று, செல்லத்தக்க நடத்துனர் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான தகுதியும் விருப்பமும் உடையவர்கள் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக ரூ.1,180 செலுத்தியும், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் ரூ.590 செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.
இதுவரை விண்ணப்பித்த பணியாளர்களின் எண்ணிகையை பார்க்கும் 3ல் ஒருவருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும். அதன் மூலமே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு குறித்த விவரங்கள் விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளைக்கு (ஏப்ரல் 21ம் தேதிக்குள்) விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications