நாளை செங்கல்பட்டு போங்க.. சென்னையின் புறநகர் பகுதியில் பிரபல நிறுவனங்களில் 5000 பேருக்கு வேலை உறுதி
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். சுமார் 5000 பணிகளுக்கு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய நிறுவனங்கள் ரெடியாக உள்ளன.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (20.06.2025) செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், அந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

முன்னணி நிறுவனங்கள்
படித்து முடித்த இளைஞர்கள் பலருக்கும் வேலை தருவதற்கு நிறுவனங்கள் ரெடியாக உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள மாவட்டமாக திகழ்கிறது. ஐடி தொழில், கனரக வாகன உதிரிபாகங்கள் தொழில், ஆட்டோமொபைல் தொழில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி தொழில் கொடிகட்டி பறக்கிறது. இந்த பகுதியில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் முகாம்களில் பங்கேற்க உள்ளன. சுமார் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள போகின்றன.
5000 பேருக்கு வேலை
அப்படி கலந்து கொள்ளும் நிறுவனங்கள் சுமார் 5000 பணிக்காலியிடங்களுக்கு நிரப்பிட முடிவு செய்துள்ளன. நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளன. எனவே இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு யார் வேண்டுமானாலும் வேலைவாய்ப்பை பெறலாம். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றில்லை.. யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசமாக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இணையதளத்தில் பதிவு
வேலை தேடுவோரும் சரி, வேலைக்கு ஆட்கள் தேவை என்று உள்ள நிறுவனங்களும் சரி, உடனடியாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை கிடைக்கும் என்பதால் அவர்களும் முகாமில் கலந்து கொள்ளலாம்.
யார் பங்கேற்கலாம்
செங்கல்பட்டில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வித் தகுதி உடையவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் நேரில் சென்று பங்கேற்கலாம். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
சான்றிதழ்கள் விவரம்
முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 20.06.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 02.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைகளை பெறலாம்.












Click it and Unblock the Notifications