அங்கன்வாடியில் வேலை.. 618 பணியிடங்கள்.. 12ம் வகுப்பு தகுதி! எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு கிடையாது
சென்னை: புதுவை அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறையின் கீழ் காலியாக உள்ள 618 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வோ, நேர்முகத்தேர்வோ கிடையாது.
புதுவை யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் வரிசையாக நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக புதுவை அரசு உரிய அறிவிப்பு வெளியிட்டு ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* அங்கன்வாடி பணியாளர் - 344
* அங்கன்வாடி உதவியாளர் - 274
கல்வித் தகுதி:
கல்வி தகுதியை பொறுத்தவரை இரண்டு பணியிடங்களுக்குமே குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு முடித்து இருப்பது அவசியம். தேர்வு செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
அங்கன் வாடி பணியாளர், உதவியாளர் என இரு பணியிடங்களுக்குமே 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி மையம் அமைந்திருக்கும் பகுதியில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். அதுமட்டும் இன்றி புதுவையை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் புதுவையில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
தேவையான ஆவணங்கள்:
தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படிக்கவும். விண்ணப்பிப்பதற்கு பிளஸ் டூ - மதிப்பெண்கள் சான்றிதழ், இருப்பிடம்/ வசிப்பிடம் சான்றிதழ்
ஆதார் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை,பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றின் ஒளிநகல்கள் தேவைப்படும்.
தேர்வு முறை:
அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வோ, நேர்முகத்தேர்வோ கிடையாது. 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அதாவது மெரிட் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை https://wcd.py.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 22.12.2025 மாலை 5 மணி வரை அவகாசம் உள்ளது.












Click it and Unblock the Notifications