தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு ஊழியர் ஆகவே முடியாது.. ஹைகோர்ட் வழக்கில் அதிரடி திருப்பம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் உள்பட தமிழ்நாட்டில் அரசு பணிக்கான தேர்வில் தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2021 முதல் அரசு தேர்வு எழுத தமிழ் கண்டிப்பாக தெரிய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைச் சட்டத்தில், 2021-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதன்படி, அரசுப் பணிக்கு நடக்கும் தேர்வில், தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் என்பவர் உள்பட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''விண்ணப்பதாரர்களுக்கான கல்வித்தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. குரூப்-4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியவர்கள். அதனால், அவர்கள் தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம். இதுதொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த அரசாணைப்படி ஏற்கனவே பல தேர்வுகள் நடத்தப்பட்டுவிட்டது.
அரசு பணிகளுக்கு தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்ற அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications