தமிழக அரசு தரும் 5.60 லட்சம் ரூபாய்.. இறால் வளர்க்க ரெடியா இளைஞர்களே.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: இறால் வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக தமிழக அரசால் உவர்நீர் இறால் உற்பத்தியினை அதிகப்படுத்திட பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.60 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடலூர் மாவட்டத்தினருக்கு அழைப்பு விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கவும், புதியதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்வோர் பயன்பெறும் வகையில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 01 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.8 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியமாக ரூ.3.20 லட்சமும் பெண்களுக்கு 60% மானியமாக ரூ.4.80 லட்சமும் வழங்கப்படும். இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6 லட்சம் பொதுபிரிவினருக்கு 40% மானியமாக 2.40 லட்சமும், பெண்களுக்கு 60% மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "கடலூர் மாவட்டத்தில் இறால் வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக தமிழக அரசால் உவர்நீர் இறால் உற்பத்தியினை அதிகப்படுத்திட பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் (2021-2022) மற்றும் அக்குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் 6 ஹெக்டர் (பொது) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 1 ஹெக்டர் புதிய குளங்கள் அமைப்பதற்கு ரூ.8 இலட்சம் மற்றும் உள்ளீடு வழங்க ரூ.6 இலட்சம் ஆக மொத்த செலவினம் மேற்கொண்ட தொகையில் 40 சதவீதம் மானியம் ரூ. 5.60 இலட்சம் வழங்கப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ரேவு மெயின் ரோடு, கடல் உயிரியல் அண்ணாமலை பல்கலைக்கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை புவனகிரி (வட்டம்) கடலூர் (மாவட்டம்) அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10-ந்தேதி க்குள் விண்ணப்பிக்க வேண்டும்" இவ்வாறு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications