கை நிறைய சம்பளம் தரும் மத்திய அரசு வேலை.. வெளியான புதிய அறிவிப்பு! தனியாக எழுத்து தேர்வு இல்லை!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகம் ஐபி துறையில் காலியாக இருக்கும் புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 258 பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், புலனாய்வு அதிகாரியாக விருப்பம் இருக்கும் இளைஞர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் கல்வித் தகுதி, தேர்வு செய்யும் பிராசஸ் குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சகம், ஐபி எனப்படும் intelligence bureau துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

வேலைவாய்ப்பு
மத்தியப் புலனாய்வு உதவி அதிகாரி, அதாவது ACIO-II/Tech பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதற்காக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது தொடர்பான தகவல்களும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் 258 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்குத் தனியாக எழுத்துத் தேர்வு எதுவும் இல்லை. GATE 2023, 2024 அல்லது 2025ல் தகுதி மதிப்பெண் பெற்றாலே போதும்.. இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டிய தேதிகள்
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: நவம்பர் 16, 2025
விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி: நவம்பர் 18, 2025
காலியிடங்கள்:
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி: 90 இடங்கள் (பொது பிரிவுக்கு 40, பொருளாதார ரீதியாக பின் தங்கியோர் 7, ஓபிசி 24, எஸ்சி 13, எஸ்டி 6)
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்: 168 இடங்கள் (பொது பிரிவுக்கு 74, பொருளாதார ரீதியாக பின் தங்கியோர் 14, ஓபிசி 44, எஸ்சி 24, எஸ்டி 12)
சம்பளம் எவ்வளவு கிடைக்கும்:
ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரை கிடைக்கும்.
மேலும், ஸ்பெஷல் செக்யூரிட்டி அலவன்ஸாக அடிப்படை ஊதியத்தில் 20% கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி
எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், அதாவது கேட் தேர்வில் EC அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் & தகவல் தொழில்நுட்பம், அதாவது கேட் தேர்வில் CS ஆகிய துறைகளில் தேவையான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.. 2025 மட்டுமின்றி 2024, 2023ம் ஆண்டுகளில் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட இதில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்போர் பொறியியலில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், டெல்லியில் நடைபெறும் திறன் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு நேரடியாக அழைக்கப்படுவார்கள். ஒருவர் 2023, 2024, 2025 என மூன்று கேட் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் அதில் அதிக மார்க் தேர்வு செயல்முறைக்குத் தேர்ந்தெடுக்கப்படும். கேட் மதிப்பெண், திறன் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
இதற்குத் தேர்வுக் கட்டணமாக ₹100 செலுத்த வேண்டும். மேலும், பிராசசிங் கட்டணமாக ₹100/ செலுத்த வேண்டும்.. இந்தத் தொகையை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ அல்லது சலான் மூலம் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய ரசீதைப் பத்திரமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கும் இதற்கு அப்ளை செய்யவும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வப் பக்கத்திற்குச் செல்லவும்!












Click it and Unblock the Notifications