யூனியன் வங்கியில் அதிகாரி பணி! சொந்த ஏரியாவில் வேலைக்கு சான்ஸ்! 1500 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது
சென்னை: யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 1,500 உள்ளூர் வங்கி அதிகாரி (லோக்கல் பேங்க் ஆபிசர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். இதற்கான கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு, எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்த வங்கிக்கு நாடு முழுவதிலும் கிளைகள் இருக்கின்றன. சுமார் 75 ஆயிரம் ஊழியர்கள் இந்த வங்கியில் பணிபுரிந்து வருகிறார்கள். யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் வழியாகவும், சில பதவிகளுக்கு நேரடியாகவும் நிரப்பப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், 1,500 உள்ளூர் வங்கி அதிகாரி (லோக்கல் பேங்க் ஆபிசர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளைக்கு விண்ணப்பித்து விடுங்கள். எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள்:
லோக்கல் பேங்க் ஆபிசர் (JMGS-I) - 1,500 பணியிடங்கள்.
தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கேரளா - 100 பணியிடங்கள் என மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்பட 10 மாநிலங்களில் உள்ள காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பட்டம் முடித்து இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல் உள்ளூர் மொழி கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: தேர்வர்கள் 20- 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி
எஸ்.சி/எஸ்.டி - 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (ஒபிசி) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (ஒபிசி) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் தளர்வுகள் வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: மாதம் ரூ.48,480 - 85,920 வரை சம்பளம் கிடைக்கும்.
எப்படி விண்ணபிப்பது?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு / குரூப் டிஸ்கசன் எனப்படும் குழு ஆலோசனை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் எண்ணிக்கையை பொறுத்து நேர்முகத்தேர்வு நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும்.
தேர்வு மையங்கள்: நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வானது நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோயில் / கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.175 ஆகும். விண்ணப்பிக்க நாளை தான் (13.11.2024) கடைசி நாள் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications