வேலை இல்லையா? கவலை வேண்டாம்; இண்டர்வியூவுக்கு போங்க; அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோட வாங்க! விவரம் இதோ!
திருச்சி: வேலையில்லா இளைஞர்களுக்காக தமிழக அரசின் முயற்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பி.இ., எம்.பி.ஏ. படித்தவர்கள் வரைக்கும் பணி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது.
இதனால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தோர் மிகுந்த பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;
திண்டுக்கல்லில் வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நவ.28-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- பயனடையலாமே!
வேலைவாய்ப்பு
''திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமையன்று (26.11.2021) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ (All Trades), டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு (B.E. Also) முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18க்கு மேல் 35க்குள்) கலந்துகொள்ளலாம்.''
நேரில் வந்து
''மேற்படி நேர்காணலில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு (Resume) மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.''
யார் யாருக்கு?
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு தொடர்பாக ஆட்சியர் சிவராசுவை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்டது. திருச்சியில் நடத்தப்படும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பங்குபெற முடியுமா அல்லது வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன்பெற முடியுமா என வினவிவோம்.
முன்னுரிமை
''திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும், அதேவேளையில் அருகாமை மாவட்டங்களான புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களை சேர்ந்தோரும் விருப்பமும், ஆர்வமும் இருப்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் பயன்பெற்றுக்கொள்ளலாம்'' என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பதிலளித்தார்.