அறிமுகமானது தமிழக அரசின் 'இலயா' சாட்பாட்.. தமிழக இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்.. என்னென்னு பாருங்க
சென்னை: தமிழக இளைஞர்கள் திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை எளிதாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 'இலயா சாட்பாட்' செயற்கை நுண்ணறிவு தளத்தை ஆரம்பித்துள்ளது. இந்த சாட்பாட் தளத்தை விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நிகழ்ச்சி நடந்தது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும் செயற்கை நுண்ணறிவு 'சாட்பாட்' தளம் தொடக்க நிகழ்ச்சிதான் அந்த நிகழ்ச்சியாகும்.

இதில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும் 'இலயா' எனும் செயற்கை நுண்ணறிவு 'சாட்பாட்' தளத்தையும், ஒருங்கிணைந்த தகவல் மையத்தையும் அவர் தமிழக இளைஞர்களுக்காக தொடங்கி வைத்தார்.
மேலும், மரபு சார் தொழில் திறன்களில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் 'நீயே உனக்கு ராஜா' எனும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் திறன் பயிற்சி திட்டத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டை சேர்ந்த பலர், இஸ்ரோ, கூகுள், ஐ.பி.எம். மைக்ரோசாப்ட் ஆகிய புகழ் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். நீதி கட்சி தலைவர்கள் பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கல்விக்காக கொடுத்த முக்கியத்துவமே இந்த வெற்றிக்கு முழு காரணமாகும். வேலை வாய்ப்பு என்ற உலகத்திற்கு செல்லும் தமிழக இளைஞர்கள், பெரிய நிறுவனங்களின் உயர் பொறுப்புக்கு செல்வீர்கள் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு உள்ளது.
கிராமப்புற இளைஞர் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளில் 2 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு குறுகிய கால பயிற்சி வழங்கி உள்ளோம். அவர்களில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தினால் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு, மாணவர்களின் திறன் ஆகியவற்றிற்கு இடையே இருந்த மிகப்பெரிய இடைவெளி குறைந்திருக்கிறது.
தனியார் துறைகள் மட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசு துறை பணிகளுக்கான போட்டித்தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அரசு நடத்தும் மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தமிழக அரசு நடத்தும் இளைஞர் திறன் திருவிழா, வேலை வாய்ப்புகள், இளைஞர் திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள் . மாணவர்கள் திறன் பயிற்சி குறித்து 25252626 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடியும். தமிழ்நாடு திறன் பயிற்சி திட்டத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்புகளை பெற வேண்டும். பணி நியமன ஆணை பெறும் இளைஞர்கள், அதில் தங்களை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாக வேலை செய்ய வேண்டும். உங்களுக்கு உதவ, உங்களுக்கு வழிகாட்ட தமிழ்நாடு அரசு எப்போதுமே தயாராக இருக்கிறது" இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications