குரூப் 4 காலியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு.. கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்ப்பு - டிஎன்பிஎஸ்சி
சென்னை: குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை 2வது முறையாக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி குரூப் 4 பணிக்கு கூடுதலாக 2,208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2 என பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்பது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 23 வகையான பணிகளில் மொத்தம் 6,244 பணியிடங்களை நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 9 ம்தேதி குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 15.88 லட்சம் பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று அரசியல்கட்சி தலைவர்கள், தேர்வர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு சமீபத்தில் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதாவது கூடுதலாக 480 பணியிடங்கள் நிரப்பப்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனால் குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கை என்பது 6724 என்ற அளவில் உயர்ந்தது. இருப்பினும் கூட தேர்வர்கள் அதிருப்தியில் இருந்தவர். குரூப் 4 தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதியுள்ள நிலையில் குறைந்தபட்சம் 8 ஆயிரம் என்ற அளவில் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறினர். இந்த கோரிக்கை தற்போது அரசால் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 2வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது குரூப் 4 நிலையிலான தமிழக அரசு பணிக்கு கூடுதலாக 2,208 காலியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை என்பது 8932 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால் குரூப் 4 பிரிவில் தேர்வு எழுதியவர்கள் மிகழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications