டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டு கால அட்டவணை எப்போது வெளியாகும்? தேர்வர்களுக்கு வந்த புது அப்டேட்
சென்னை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் அட்டவணை வெளியிட்டு அதன்படி இந்த தேர்வுகளானது நடந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான அதாவது 2026 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அரசு பணிக்காக காத்து இருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது டிஎன்பிஎஸ்சிதான்.

டிஎன்பிஎஸ்சி ஆண்டு கால அட்டவணை
எனவே படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும் வேலை நிச்சயம் என்பதால், தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளுக்காக மிகுந்த நம்பிக்கையுடன் ஆண்டுக்கணக்கில் படித்து வருகிறார்கள். குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி வழியாக நிரப்பப்படுகின்றன.
துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை அலுவலர் என தமிழக அரசு துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சியே நிரப்பி வருகிறது. தேர்வர்களின் நலன் கருதியும் தேர்வுக்கு தயாராகும் வகையிலும், டிஎன்பிஎஸ்சி ஆண்டு கால அட்டவணையும் வெளியிடுவது வழக்கம். அதாவது, அடுத்த ஆண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? என்பதை முன்கூட்டியே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது.
குரூப் 4 பணியிடங்கள் அதிகரிக்கும்
இதற்கேற்ப தேர்வர்கள் திட்டமிட்டு படிக்க தயாராவார்கள். இதனால், தேர்வர்கள் மத்தியில் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் இந்த ஆண்டு அட்டவணை எப்போதும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான், டிஎன்பிஎஸ்சி 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து எஸ்.கே. பிரபாகர் கூறியதாவது:
"குரூப்-4 தேர்வில் காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும். பல்வேறு துறைகளிடம் இருந்து காலிப்பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதேபோல, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிட எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு தேர்வுகளின் போது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உரிய காலிப்பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்பட்டது.
விரைவில் வெளியாகும்
இதனால், காலிப்பணியிடங்கள் அதிகம் இருப்பது போல இருந்து இருக்கலாம். ஆனால், தற்போது அந்தந்த ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அதே ஆண்டு நிரப்பிவிடப்படுகிறது. இதனால், காலிப்பணியிடங்கள் குறைவாக உள்ளது போல் இருக்கிறது. மாநில அரசு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் அல்லாத பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்ப அரசு முடிவு செய்து இருக்கிறது.
இந்த பணியிடங்கள் கல்வி தகுதி ஏற்ப குரூப் 2, மற்றும் குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு வழியாக நிரப்பப்பட உள்ளது. 2026 ஆம் ஆண்டு தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி முடிவு பெறும் நிலையில் உள்ளது. எனவே, குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் விரைவில் வெளியாகும்" என்றார்.












Click it and Unblock the Notifications