Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madras day: சுனாமி, புயல், வெள்ளம், வறட்சி.. அப்பப்பா.. தடைகளை தகர்த்து எழுந்த 'ஃபீனிக்ஸ்' சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அன்னைக்கு பிறகு சென்னை.." என்று சொல்லக்கூடிய அளவுக்கு பலரது வாழ்க்கையை உயர்த்தியுள்ளது சென்னை மாநகரம். எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஒளி ஏற்றிவரும் சென்னை நகரம், பல சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்த்து நின்று இரும்புக்கோட்டை போல தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்துள்ளது என்பதுதான் வரலாறு.

ஆம்.. தொடர்ந்து பல இயற்கை சீற்றங்களின் மையப்புள்ளியாக இருந்துள்ளது சென்னை . சாதாரண இயற்கை சீற்றங்கள் என்று கிடையாது, சுனாமி போன்ற நூற்றாண்டுகால, கடும் துன்பங்களை கூட கண்முன்னே கண்ட நகரம் சென்னை. ஆனால், மறுநிமிடமே துளிர்த்து எழும் இளம் தளிர் போல, முகம் காட்டி சிரித்து முற்றிலுமாக பாதிப்புகளிலிருந்து மீண்டு தன்னை நிரூபித்த நகரமும் சென்னைதான்.

"மெட்ராஸ் டே 382" கொண்டாடப்படும் இந்த சூழ்நிலையில், இந்த நகரம் சந்தித்த மற்றும் அதிலிருந்து மீண்டு வந்து ஜெயித்த கதையை கண்டிப்பாக நாம் நினைத்து பார்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும் வரலாறு அவை.

Madras day: Chennai gets bounce back from many natural disasters

கடற்கரை நகரம்

வங்க கடலை ஒட்டி இருந்ததால்தான் ஆங்கிலேயர் காலம் தொட்டு, சென்னை ஒரு முக்கியமான பட்டினமாக விளங்கியது. ஆனால், இந்த இயற்கை சூழல் வரமாக மட்டுமல்லாது, சில நேரங்களில் பாதகமாகவும் மாறியது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் போது பெரும்பாலும் அது சென்னைக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளது. புயல் உருவானாலே, சென்னை மக்கள் தங்கள் ஒவ்வொரு நொடியையும் அச்சத்தோடு கடத்த வேண்டிய நிலையில்தான் இன்று வரை இருக்கின்றனர். 1639 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கியது முதல் சென்னை வயது கணக்கிடப்படுகிறது . எனவே தான் சென்னைக்கு வயது தற்போது 382 என்று சொல்கிறோம். பழம்பெருமை வாய்ந்த இந்த நகரம் மெட்ராஸ் டே என்று கொண்டாடப்படும் முன்னெடுப்பு 2004ம் ஆண்டில் முதல் தொடங்கியது. சென்னை பாரம்பரிய அறக்கட்டளையால் மெட்ராஸ் டே என்ற தினம் முன்னெடுக்கப்படுகிறது. சுனாமி மோசமாக தாக்கியதே அந்த 2004ம் ஆண்டு முதல்தான் சென்னையும் மெட்ராஸ் டே கொண்டாட்டங்களில் தன்னை ஈடுபடுத்த ஆரம்பித்தது என்பது, சவால்களில் இருந்து சாதனை என்ற சென்னையின் வரலாற்றுக்கு மற்றொரு உதாரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்னையை தாக்கிய சுனாமி பேரலைகள்

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தோனேசியா கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 9.1 என்ற அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் பதிவானது. இதன் காரணமாக சுனாமி அலைகள் உருவானது. சென்னை கடற்கரை பகுதிகளில் இது கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் சமாதியை தாண்டி கடல் அலைகள் உள்ளே புகுந்தன. நடை பயிற்சி செய்த பலரும் அலையோடு கடலுக்குள் வாரி சுருட்டப்பட்டனர். மெரினா கடற்கரை அருகே இருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆர்ப்பரித்து இழுத்துச் செல்லப்பட்டன. மீனவர்களின் படகுகள் அடித்துச் செல்லப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் சுனாமியால் கொல்லப்பட்டனர். அதில், கணிசமானவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். உலகின் மிக மோசமான இயற்கை சீரழிவு பட்டியலில் சுனாமி தாக்குதலுக்கு 6வது இடம் கிடைக்கும் அளவுக்கு நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. அந்த மாபெரும் இயற்கை பேரழிவில் இருந்து தன்னைத் தேற்றிக்கொண்டு மீண்டு வந்த நகரம் சென்னை.

ஜல் புயல்

சுனாமியை பார்த்த சென்னைக்கு புயல்கள் என்ன மாத்திரம். ஆனாலும், ஒவ்வொரு முறையும், புயல்கள் சென்னையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து கொண்டிருந்தன. அதில் ஒரு பெயர்தான் ஜல். 2010ஆம் ஆண்டு தென்கிழக்கு வங்க கடலில் உருவான ஜல் புயல் நவம்பர் 6ஆம் தேதி அதிதீவிர புயல் என்ற நிலையிலிருந்து புயலாக மாறி மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே கரையைக் கடந்தது. இவ்விரு நகரங்களுக்கும் நடுவே தான் சென்னை அமைந்துள்ளது என்பதால், சென்னையில் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000த்திற்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

தரை தட்டிய கப்பல்

2012ம் ஆண்டு, வங்கக்கடலில் உருவானது நீலம் புயல். அக்டோபர் 31ம் தேதி மாமல்லபுரம் அருகே மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது சென்னை பட்டினப்பாக்கம் அருகே பிரதிபா காவிரி என்ற கப்பல் புயலில் சிக்கி தரை தட்டியது. அதிலிருந்து குதித்து 6 பேர் உயிரிழந்தனர். சுனாமி கடலில் இருந்து தண்ணீரை சென்னைக்குள் வாரி இறைத்தது. ஆனால் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை வானத்திலிருந்து பேரலைகளை சென்னைக்குள் வாரி இறைத்தது என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்கு 100 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்தில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை என்றால் எப்படி ஒரு நகரம் தாங்க முடியும் .. அதுவும் கழிவுநீர்க் கால்வாய்களை ஆக்கிரமித்துக்கொண்டு அதிகப்படியான கட்டிடங்கள் அமைந்துள்ள சென்னை போன்ற நகரத்தில் நிலைமையை சொல்லி தெரியவேண்டியதில்லை. நகரில் உள்ள சுரங்கப்பாதைகள் வெள்ள நீரில் மூழ்கின. சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சென்னை வெள்ளத்தினால் 470 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். முதல் மாடி வரை வெள்ளநீர் சூழ்ந்தது. ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவம் உணவுப் பொட்டலம் வழங்கும் நிலைக்கு தலைநகரம் தள்ளப்பட்டது. பல இடங்களில் வெள்ள நீர் வடிவதற்கு ஒரு வாரம் மேலே பிடித்தது.

வர்தா புயல்

அடுத்த வருடமே, 2016ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, சென்னையில் கரையை கடந்தது வர்தா புயல். இது மரங்களை பிடுங்கி வீசுவதற்காக வந்த புயல் என்று அழைக்கிறார்கள் இயற்கை நிபுணர்கள். ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்து நகரமே இருளில் மூழ்கியது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. 45 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் . சென்னையில் மட்டுமே 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொது சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

சென்னை வெள்ள பாதிப்பு வரலாறு

முன்னதாக சென்னையில் 1976ம் ஆண்டு, 1985, 1996, 1998 ஆண்டுகளிலும் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்த ஆவணப்படுத்தல் இல்லை என்பதால், வெள்ளம் என்றாலே நாம் மேலே குறிப்பிட்ட இத்தனை சம்பவங்களையும் சொல்ல முடியும். 1976ல் ஏற்பட்ட வெள்ளம் மோசமானது. சில மணி நேரங்களில் 45 செ.மீ மழை கொட்டித்தீர்த்ததால், செம்பரம் பாக்கம் ஏரியில் வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கூவம், அடையாறு போன்ற ஆறுகள் அனைத்திலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரிய வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதேபோலத்தான், 1985ல் அடையாற் றில் 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது கரையோர வீடுகள் மூழ்கின. 1996ல் அடையாற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 80 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டதற்கான புள்ளி விவரங்கள் உள்ளன. இதனால் காரனோடை பாலம் உடைந்தது வெள்ளக்காடானது. 1998ம் ஆண்டு மழை வெள்ளத்தால் கொடுங்கையூர் - பக்கிக்காம் கால்வாய் உடைந்தத

சென்னை வறட்சி

வெள்ளம், புயல், சுனாமி என்று தண்ணீர் மட்டும்தான் சென்னையை தவிக்க விட்டது என்று கிடையாது . தண்ணீர் இல்லாமலும் தவித்து உள்ளது சென்னை. 2018ம் ஆண்டு அப்படித்தான் நடந்தது. மழை பொய்த்து, நிலத்தடி நீர் கூட இல்லாமல், ஆந்திரா மற்றும் வேலூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. மாபெரும் வறட்சி தலைவிரித்தாடியது . சென்னையில் 700 ரூபாயாக இருந்த ஒரு லாரி தண்ணீர் 2500 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. வெள்ளம், வெள்ளம் என்று தவித்த மக்கள், தண்ணீர், தண்ணீர் என்று தாகத்தோடு ஏங்கினர். பெய்தும் கெடுத்தது.. பொய்த்தும் கெடுத்தது மழை. ஆனால் தண்ணீர் கடலில் இருந்து வந்தாலும், வானத்திலிருந்து வந்தாலும் சரி, தண்ணீரே வராவிட்டாலும் சரி. அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி வெற்றி படிக்கட்டுகளில் தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறது இந்த சென்னை மாநகரம். இந்த நகரம் தொடர்ந்து சோதனைகளை சாதனைகளாக்கி இயங்க, அதன் ஒவ்வொரு மக்களின் ஒத்துழைப்பும், நட்பும், நேசமும், உழைப்பும், வியர்வைத் துளிகளும் தான் காரணம். இந்த ஒற்றுமையோடு, ஆயிரம் சவால்கள் வந்தாலும் அத்தனையையும் முறியடித்து சென்னை நீடூழி வாழ்க என்று நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+