பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு- 7 தமிழர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி கேட்பாரா? மு.க.ஸ்டாலின்
நாகை: பிரதமர் மோடியிடம் நீட் தேர்வு விலக்கு, 7 தமிழர் விடுதலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்பாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் நாகை வடக்கு - தஞ்சை வடக்கு மாவட்ட தொகுதிகளில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முதலமைச்சரும் அமைச்சர்களும்தான் தமிழகத்தை பொருளாதார ரீதியாக - தொழில் ரீதியாக 50 ஆண்டுகளுக்கு பின்னால் இழுத்துத் தள்ளியவர்கள். ஊழல் செய்வதற்கே தலைமைச் செயலகத்திற்கு வந்தவர்கள். பினாமி கம்பெனிகளை வைத்து கொள்ளையடித்தவர்கள். கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கியவர்கள். அதனால் தான் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அவர்கள் வருகிறார்கள். தங்கள் கட்சி தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக மோடியும் ஒரு ஷோ காட்டுவதற்காக வருகிறார்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களே! 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு என்பது தான் உங்களிடம் நான் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி! ஒரு செங்கலை கூட வைக்கவில்லையே என்பது தான் நான் எழுப்பும் கேள்வி! பா.ஜ.க.விடம் நான் அடிமையாக இல்லை என்று சொல்லும் பழனிசாமி, இந்தக் கேள்வியை மோடியிடம் கேட்பாரா?
* நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தீர்மானம் போட்டோம். 1 முறையல்ல, 2 முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாகப் போட்டு அனுப்பினோம்! விலக்கு பெற முடிந்ததா பழனிசாமியால்? தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை மத்திய அரசே நீ ஏன் மதிக்கவில்லை என்று கேட்க முடியுமா பழனிசாமியால்?
* 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. தமிழக அமைச்சரவை தீர்மானம் போட்டு அனுப்பி விட்டது. ஆனாலும் ஆளுநர் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார். இது பா.ஜ.க. அரசு சொல்லிக் கொடுத்து நடத்தும் நாடகம் தான். ஏன் இந்த நாடகம் நடத்துகிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்க முடியுமா பழனிசாமியால்?
* உச்சநீதிமன்றம் உத்தரவு போட்ட பிறகும் காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்காமல் மத்திய அரசின் ஜல்சக்தி துறையில் ஒரு பிரிவாக தமிழகத்தின் காவிரி உரிமையை மூடிவைத்துவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு. 'காவிரி காப்பான்' என்று பட்டம் போட்டுக் கொள்ளும் பழனிசாமி, இதை பாரதப் பிரதமரிடம் தட்டிக் கேட்க முடியுமா? தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்களின் உரிமையைக் காக்க அதிகாரம் பொருந்திய காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று போராடுவதற்கு பழனிசாமி தயாரா?
* காவிரி பிரச்னைக்காக தங்கள் மாநிலத்துக்கு சலுகை வேண்டும் என்பதற்காக கர்நாடக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போய் பிரதமரை சந்தித்தார்கள். எங்களுக்கு இந்த நன்மைகள் எல்லாம் வேண்டும் என்று கேட்டார்கள். அப்படி தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம், தான் மட்டுமாவது போய் கேட்டாரா? காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுகிறது கர்நாடகா. அதைத் தடுக்கச் சொல்லி மோடியை வலியுறுத்துவாரா பழனிசாமி?

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யக் கேட்ட நிவாரணம் முழுமையாக கிடைத்துவிட்டதா? இல்லை!
புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யக் கேட்ட நிவாரணத்தை முழுமையாக மத்திய அரசு கொடுத்துவிட்டதா? இல்லை!
ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய தொகை 19,000 கோடி ரூபாய். அதனை கேட்டுப் பெற பழனிசாமியால் முடிந்ததா? இல்லை!
நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி வளர்ச்சிக்காக 14வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு 2,500 கோடி ரூபாய் அனுமதித்தது என்றும், அதனை மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாகத் தரவில்லை என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். 3 ஆண்டுகளாக இதை ஏன் கேட்க முடியவில்லை?
இப்படி பல்வேறு திட்டப்பணிகளுக்காக தமிழகம் கேட்ட தொகைகள் அனைத்தும் தராமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications