வாழ்க்கை ஒரு மலர்.. காதல்தான் அதன் தேன்!
வாழ்க்கையை ஒரு மலர் என்று எடுத்துக் கொண்டால்.. அதன் தேன்தான் காதல்.. இதை விக்டர் ஹியூகோ சொல்லியுள்ளார்.
எத்தனை உண்மை பாருங்க.. தேன் இல்லாத மலர்கள் உண்டா.. தேனை அருந்தாத வண்டுகளும் தான் உண்டா.. காதலை பருகாத மனிதர்கள் உண்மையில் துரதிர்ஷ்டசாலிகள்தான். காதலைப் போன்ற ஒரு அருமருந்தை நுகராத யாருக்குமே வாழ்க்கையில் மோட்சமே கிடையாது என்று கூட சொல்லலாம்.
காதல் இனிமையானது. தேன் போன்ற காதலை அனுபவிக்காதவர்கள் எவறேனும் உண்டா. அதைச் சுவைக்க விரும்புவர்கள் தான் அதிகம். ஒருவரைப் பார்க்கும் போது நம் மனதில் அவர் மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது என்றால் அது காதலாக இருக்கலாம். காதலிக்கும் போது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மிக அழகாகத் தெரியும்.
இருபது வயதில் இளமைக் காதல்அறுபது வயதில் அனுபவக் காதல் எங்கும் காதல் புதுமைக் காதல். அடிக்கரும்பிலிருந்து நுனிக்கரும்பைச் சாப்பிடும் போது எவ்வாறு அதன் சுவை கூடிக் கொண்டே போகிறதோ அதே போல் காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் முதுமைக் காலம் வரை காதல் இன்னும் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
காதலிக்கும் போது மனம் பட்டாம்பூச்சி போல் சிறகடிக்கும். இரவெல்லாம் தூக்கமில்லாமல் எப்பொழுதும் துணையின் நினைவாகவே இருக்கும். உங்கள் காதலுக்காக எதையும் செய்யத் துணிவீர்கள். அழகாக உடை அணிந்து கையில் ரோஜா மலருடன் சென்று அன்பே ஆருயிரே என் வாழ்வில் வீசிய தென்றலே உன்னோடு காலம் முழுவதும் வாழ விரும்புகிறேன் அன்பே என்னை ஏற்றுக் கொள்வாயா என்று கேளுங்கள். உங்கள் கவிதை மழையில் நிச்சயம் உங்களை அவர் ஏற்றுக் கொள்வார்.
நீதான் என் உலகமே என்று கூறி இன்று உங்கள் காதலர் அல்லது காதலிக்கு காதல் பரிசளியுங்கள். முத்தங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் உங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்கிறீர்கள். காதலைக் கொண்டாட ஒரு வாரம் போதாது எல்லா நாளும் கொண்டாட வேண்டும். உனக்கென நான் எனக்கென நீ என்று காதல் மொழி பேசுங்கள். காதல் செய்வீர். பிப்ரவரி 14 மட்டுமல்ல.. என்றென்றும் காதலர் தினம்தான்.. காதலர் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.