மக்கள் நலனுக்காக.. களப் பணியாற்றும் டாக்டர்களை வணங்குவோம்!
சென்னை: தெய்வத்தை நேரில் கண்டதில்லை நாம் மருத்துவர்களின் வடிவில் தான் காண்கிறோம். மக்களின் உயிர்களைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர் மருத்துவர்கள். நேரம் காலம் பாரக்காமல் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதில் வல்லவர்கள். இன்று உலகம் முழுவதும் மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நோயின் பிடியிலிருந்து பாதுகாக்க மருத்துவர்கள் இருபத்திநான்கு மணி நேரமும் போராடி வருகின்றனர். தன் குடும்பத்தைப் பிரிந்து மக்கள் நலனுக்காகப் பாடுபடும் மருத்துவர்களைப் போற்றுங்கள்.
தன்னுயிரையும் துச்சமென எண்ணி நம் உயிரைக் காக்கும் போராளிகள் அவர்கள். நோயின் தாக்கத்தை உணர்ந்து சிகிச்சையளிப்பதில் வல்லவர்கள். நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் மக்களிடம் கூறுகிறார்கள் மருத்துவர்கள். தியாக உள்ளம் கொண்டவர்கள் மருத்துவர்கள். மருத்துவரான பி சி ராய் அவர்களின் நினைவு தினத்தை தான் நாம் மருத்துவர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
பிறருக்காகவே வாழ்பவர்கள் மருத்துவர்கள்... நாம் வாழ; மருத்துவர்கள் நலம் வாழட்டும் -மு.க.ஸ்டாலின்
நம் அன்றாட உணவுமுறைகளின் மூலம் நோயிலிருந்து எப்படித் தப்பிப்பது என நமக்குக் கூறுபவர்கள் மருத்துவர்கள். எவ்வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்வதில் வல்லவர்கள் அவர்கள். நோயாளிகளுக்குத் தோழர்களும் அவர்களே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல்களுக்கு ஏற்றவாறு மருந்துகளைக் கொடுத்து விரைவிலேயே குணமாக்கி விடுவர்.
ஒரு நான்கு வயது குழந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இல்லாமல் தனியாக பதினான்கு நாட்கள் இருந்து குணமடைந்துள்ளது. அந்த பதினான்கு நாட்களும மருத்துவர்களின் அன்பும் ஆதரவும் சிகிச்சையுமே அக்குழந்தை மீண்டு வரக் காரணம். மக்கள் நலனுக்காகக் களப்பணியாற்றும் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள்.