"இனி ஒரு உசுரு போககூடாது.. நண்பா.. எடுத்துக்கோ".. வியக்க வைத்த நட்புகள்.. தானத்திலேயே அருமை இதுதான்!
நண்பனின் நினைவுநாளில் இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்
செங்கல்பட்டு: "இனி அநியாயமா ஒரு உசுரு போகக்கூடாது.. அதனாலதான் நாங்கள் ரத்த தானம் செய்ய வந்திருக்கிறோம்" என்று இளைஞர் பட்டாளம் ஒன்று தமிழக மக்களை உருக வைத்து வருகிறது!
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தவர் நிர்மல்குமார் என்ற இளைஞர்.. இவர் கடந்த வருடம் ஒருநாள் பைக்கில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
மறைமலை நகர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.. சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார் நிர்மல்குமார்.

ரத்தம்
இதை பார்த்த பொதுமக்கள் இவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஐசியூவில் அனுமதித்தனர். ஏராளமான ரத்தம் வெளியேறியதால், உடனடியாக அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் உயிரை காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்தது.. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டது.. ஆனால், உரிய நேரத்தில் நிர்மல்குமாருக்கு ரத்தம் கிடைக்கவில்லை.. இதனாலேயே அவர் பரிதாபமாக இறந்தும்விட்டார்.

இறந்த நாள்
நிர்மல்குமார் இழப்பை நண்பர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.. அவ்வளவு பெரிய விபத்தில் உயிர் பிழைத்தும்கூட, நேரத்துக்கு ரத்தம் கிடைக்காததால் உயிரிழந்ததை அவர்களால் தாங்கவே முடியவில்லை... நண்பன் நிர்மலின் பிரிவிலேயே ஒரு வருடம் ஓடியது.. இன்றுதான் நிர்மல்குமார் இறந்த நாள்.

ஒரே வார்த்தை
அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று நண்பர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்ததானம் செய்தார்கள்.. அப்போது அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை இதுதான்: "இனி ரத்தம் கிடைக்காமல் ஒரு உசுரு கூட போகக்கூடாது.. அதனால்தான் நாங்கள் ரத்ததானம் செய்றோம்.. என் நண்பனின் நினைவுநாளில் இனி ஒவ்வொரு வருஷமும் இப்படி ரத்த தானம் செய்வோம்" என்றனர்.

வரவேற்பு
அரசு ஆஸ்பத்திரிக்குள் திடீரென 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி திரண்டு வந்து நண்பனுக்காக ரத்ததானம் செய்த சம்பவம் அங்கிருந்த நோயாளிகள் உட்பட அனைவரையுமே கண்கலங்க செய்துவிட்டது.. இந்த நிகழ்வு பொதுமக்கள் இடையேயும் விழிப்புணர்வாக... நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. இப்படிப்பட்ட தானங்களினால் பல நிர்மல்குமார்கள் இனி உயிர்பிழைப்பார்கள் என்றே நாம் நம்பலாம்!












Click it and Unblock the Notifications