சங்கடப்படாதீங்க.. சட்டுன்னு தேங்க்ஸ் சொல்லிருங்க.. ஜாலியா இருங்க!
சென்னை: நிறையப் பேரிடம் இன்று நன்றி சொல்லும் பழக்கம் அறவே போய் விட்டது. அதை தெரிந்தோ தெரியாமலோ மறந்து விடுகிறார்கள். வெளிநாடுகளில் இந்தப் பழக்கத்தை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள்.
சின்னப் பையன் ஏதாவது நல்லது செய்தாலோ அல்லது உதவி செய்தாலோ உடனே தேங்க்ஸ் சொல்லி கை குலுக்கி பாராட்டத் தவறுவதில்லை பெரியவர்கள். ஆனால் நமது நாட்டில் தேங்க்ஸ் சொல்வது என்பதை ஒரு வழக்கமாக யாரும் பின்பற்றுவதில்லை.
யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று பாரபட்சமே தேவையில்லை. யாரெல்லாம் நமக்கு உதவி செய்கிறார்களோ, உதவி செய்யும் மனதை கொண்டுள்ளனரோ எல்லோருக்குமே நன்றி சொல்லலாம்.

கணவன் மனைவி இடையே
மனைவிக்கு கணவர் தினசரி நிறைய நன்றிகள் சொல்ல வேண்டும். அதேபோலத்தான் மனைவியும் கணவருக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு சாப்பிட உட்காருகிறோம்.. தட்டு எடுத்து வைக்கிறார்..உடனே தேங்க்ஸ் சொல்லலாம். தப்பே இல்லை. தவிக்கும்போது தண்ணீர் கொடுக்கிறாரா.. தேங்க்ஸ் சொல்லுங்க. தப்பில்லை. இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட நன்றி சொல்லும்போது நட்பும், உறவும் மேலும் வலுவடையும், அன்பும் பெருகும்.

சொல்வோம் நன்றி
கணவன் மனைவி அந்தரங்க உறவிலும் கூட இருவரும் பரஸ்பரம் நன்றி சொல்ல வேண்டும். காரணம் ஒருவரை ஒருவர் மகிழ்விக்கும் அற்புதமான தருணம் அது. அந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததற்காக தவறாமல் இருவரும் நன்றி சொல்ல வேண்டும். அது சம்பிரதாயமாக இல்லாமல் மனமார சொல்லும்போது உறவும் வலுவடையும், மனசும் நிறைவடையும்.

பிள்ளைகளுக்கும் நன்றி சொல்வோம்
அதேபோல உங்கள் பிள்ளைகளுக்கும் தாங்க்ஸ் சொல்லுங்க. வீட்டில் நீங்கள் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது உங்கள் அலைபேசி ஒலித்தால் வீட்டிலிருக்கும் குழந்தை உங்களிடம் கொடுத்தால் தேங்க்ஸ் சொல்லுங்க. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லுங்க. அது வெறும் தாங்க்ஸ் அல்ல. அது ஒரு விதமான எனர்ஜி.

ஊக்கம்
தேங்க்ஸ் என்பது வெறும் வார்த்தையல்ல. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய ஊக்கப்படுத்தக் கூடிய வார்த்தை. தினமும் நீங்கள் அலுவலகத்துக்குள் நுழையும் போது அங்கு வேலை செய்யும் வாட்ச்மேன் கதவைத் திறந்து விட்டால் அவருக்குத் தேங்க்ஸ் கூறுங்கள். அது அவருடைய வேலை தானே அதற்கு ஏன் நான் தாங்க்ஸ் கூற வேண்டும் என நினைக்காதீர்கள். அவ்வாறு நீங்கள் கூறினால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

கணவர் காபி போட்டுக் கொடுத்தால்
ஒரு நாள் காலையில் உங்கள் கணவர் காபி போட்டுக் கொடுத்தால் மனமார தேங்க்ஸ் சொல்லுங்கள். கணவன்மார்களும் மனைவி தனக்கு விருப்பமான உணவை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்தால் தேங்க்ஸ் சொல்லுங்கள். தேங்க்ஸ் என்ற ஒற்றைச் சொல் உறவைப் பலப்படுத்தும்.
வீட்டிற்கு வெளியே தேங்க்ஸ் சொல்லும் அளவிற்கு ஏனோ வீட்டில் இருக்கும் நம் உறவுகளிடம் கூறுவதில்லை.

நன்றிக்கு தனி அதிகாரம்
பிறரிடம் இருந்து கிடைத்த உதவிக்கு நிச்சயம் தேங்க்ஸ் சொல்ல வேண்டும். தெய்வப்புலவர் வள்ளுவர் இதற்கென ஓர் அதிகாரத்தையே எழுதியுள்ளார். நீங்கள் அவசரமாக அலுவலகத்துக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்களுடைய முக்கியமான பைலைக் காணவில்லை அந்த நேரத்தில் உங்கள் மனைவி அதை எடுத்துக் கொடுத்தால் உங்களுக்கு அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும். அப்போ உங்க மனைவிக்கு தேங்க்ஸ் சொல்லுங்க.

சிறு உதவிகளுக்கும் நன்றி
சிறு சிறு உதவிகளுக்கும் தேங்க்ஸ் சொல்லலாம். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கணவர் உங்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் போது தேங்க்ஸ் சொல்லுங்க. உங்களோடு உங்கள் துணையும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக்கொள்கிறாரா நிச்சயம் தேங்க்ஸ் சொல்லுங்க அவர்களுக்கு. உங்கள் குழந்தைகளுக்கும் மற்றவரிடம் தேங்க்ஸ் சொல்லக் கற்றுக் கொடுங்கள். தேங்க்ஸ் என்பது அன்பின் பரிமாற்றம். அதை மற்றவருக்குச் சொல்லும் போது ஏற்படும் ஆனந்தமும் அதைப் பெற்றவர் அடையும் புத்துணர்ச்சியும் அலாதியானது.

ஆரோக்கியமான மாற்றம்
நீங்கள் வேண்டுமானால் உங்கள் குழந்தை உங்களுக்குச் செய்த உதவிக்காக ஒரு முறை தேங்க்ஸ் சொல்லுங்க. பிறகு பாருங்க. உங்க குழந்தையின மாற்றத்தை. வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் தேங்க்ஸ் சொல்லுங்கள். அவர்களுக்கு அது ஒரு எனர்ஜி டானிக். உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் கொடுத்த ஆண்டவனுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க. சக நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்யும் போது தேங்க்ஸ் சொல்லுங்க. ஒரு முறை நீங்கள் உங்கள் வீட்டிலிருப்பவர்களுக்குத் தேங்க்ஸ் சொல்லிப் பாருங்க. அதன் பின் ஏற்படும் மாற்றத்தினைப் பாருங்கள்.












Click it and Unblock the Notifications