வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அடிதடி வேடங்களுக்கு இனி டாட்டா: அக்ஷய் குமார்
மும்பை:
இந்தித் திரையுலகின் அதிரடி கதாநாயகன் அக்ஷய் குமார், இனிமேல் அடிதடிக்கு விடை கொடுத்து விட்டு சீரியசான வேடங்களில் கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார்.
1999ல் அக்ஷய் குமார் நடித்த இரு படங்கள் வெளி வந்தன. அடிதடி தாதாவாக நிடித்த "சங்கர்ஷ் மற்றும் திருந்திய குற்றவாளியாக நிடித்த "ஜான்வர் ஆகியவையே அவை. இரு படங்களும், இதுவரை அடிதடி நாயகனாக மட்டுமே பார்த்து வந்த அக்ஷய் குமாரை, வித்தியாசமான கோணத்தில் காட்டின.
இரு படங்களும் கொடுத்த புதிய பரிமானத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதிரடி மற்றும் சீரியஸ் வேடங்களை செய்யப் போவதாக அக்ஷய் குமார் கூறுகிறார். தற்போது "கிலாடி மற்றும் "கிலாடி மேரா நாம் ஆகிய இரு படங்களிலும் அக்ஷய் நடித்து வருகிறார். இதில் இரண்டாவது படத்தில் மன நிலை பாதித்தவராக வருகிறார். திருமணமான முதல் நாளில், முதலிரவிலேயே மனைவியைக் கொல்ல முயலும் கணவராக இதில் அக்ஷய் நடிக்கிறார். மனைவியாக மகிமா செளத்ரி வருகிறார்.
தீபாமேத்தாவின் சர்ச்சைக்கிடமான "வாட்டர் படத்திலும் அக்ஷய் கதாநாயகனாக நடிக்கிறார். கைவிடப்பட்டோர் மற்றும் விதவைகளின் மறுபக்கம் குறித்து ஆராயும் படம் இது.
தனது புதிய படங்கள் குறித்து அக்ஷய் கூறுகையில், கிலாடி மேரா நாம் மற்றும் வாட்டர் இரு படங்களின் பாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. இதற்காக எனது உடல் எடையைக் கூடக் குறைத்துள்ளேன். வாட்டர் படத்தில் வரும் நாராயண் பாத்திரம்,நிஜ வாழ்வில் எனது பாத்திரம் போன்றதே. எப்படிப் பேசுவது என்ற பயிற்சியையும் எடுத்து வருகிறேன். நான் பேசும் தொணியில் மாற்றம் தேவை என்று இயக்குநர் கருதியதால் இப்பயிற்சி.
எனது அடுத்து வெளி வரும் படம் "ஹேரா பேரி இது முழுக்க, முழுக்க காமெடி படமாகும். நகைச்சுவைப் படங்கள் எப்போதுமே எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு படமாவது காமெடி செய்யாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது.
எனது சமீபத்திய படமான ஜான்வர் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் சமீபத்திய எனது தோல்விப் படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.
ஒரே ஆண்டில் பல படங்களில் நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்.
ஷாருக்கான், அஜய் தேவகன், அமிர்கான் போன்று படம் தயாரிப்பதில் எனக்கு விருப்பமில்லை. உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என்று விரும்புகிறேன். எனக்கு உடல் நலம்தான் முக்கியம்.