தங்கம் வென்ற தங்கங்கள்
கோவையில் பெண் மர்மச் சாவு வழக்கு மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம்
சென்னை:
கோவையில் சமீபத்தில் பரபரப்பு ஏற்படுத்திய பெண் மர்மச் சாவு மற்றம் அவரது கணவர் மீது ஆசிட் ஊற்றப்பட்டது தொடர்பாக மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிசிஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கோவை அருகே வழுக்குப்பாறை என்ற இடத்தில் விவசாயக் கூலி சாந்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கணவர் போத்திராஜ் மீது ஆசிட் ஊற்றப்பட்டது. விசாரணையின்போது தாங்கள் வேலைபார்த்த தோட்டத்தின் உரிமையாளர் முரளிதான் இச் சம்பவத்துக்குக் காரணம் என்றும் மனைவியை முரளி கற்பழித்துவிட்டதாகவும் போத்திராஜ் தெரிவித்தார்.
இச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத் தீர்மானத்தில் தமாகா உறுப்பினர் ஞானசேகரன், கம்யூனிஸ்ட் உறுப்பினர் சுப்பராயன், மார்க்சிஸ்ட் உறுப்பினர் மணி ஆகியோர் பேசினர்.
விவாதத்துக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதில்:
தமிழகத்தில் 80 போலீசார்தான் உள்ளனர். 6 கோடி மக்கள் வாழ்கின்றனர். எங்கோ ஒரு தோட்டத்தில் நடந்த கற்பழிப்புச் சம்பவம் போலீசாரின் கவனத்துக்குச் சென்றுவிடும் என்பது இயலாத காரியம். இருப்பினும், சம்பவம் நடைபெற்ற பிறகு விசாரணையில் அலட்சியம் காட்டக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளை வைத்து உறுப்பினர்கள் பேசியுள்ளனர். எல்லா வசதிகளும் உள்ள அரசுக்கே ஒரு சம்பவத்தைப் பற்றி முழுமையான தகவல்கள் வந்து சேர்வதில்லை. இச் சம்பவம் குறித்து குழப்பமான தகவல்கள்தான் வந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழுமையான விவரம் தீவிர விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும். பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் பெறப்படவில்லை.
இச் சம்பவம் குறித்து மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications