வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் மக்களாட்சியை உடனே கொண்டு வரமுடியாது - ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப்
சிங்கப்பூர்:
பாகிஸ்தானில் மக்களாட்சியை உடனடியாகக் கொண்டு வரமுடியாது என்று ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்தார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், சிங்கப்பூரில் வாழும் பாகிஸ்தானியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசியதாவது:
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை ராணுவ ஆட்சி மேற்கொண்டுள்ளது. சீர்திருத்தங்களைச் செய்து முடிக்க காலநேரம் ஆகும். ஆகவே, இப்போதைக்கு பாகிஸ்தானில் பொதுத் தேர்தலும் நடத்த முடியாது, மக்களாட்சியையும் கொண்டு வரமுடியாது.
பாகிஸ்தானில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர ராணுவ ஆட்சி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் மிக விரைவில் மக்களாட்சியைக் கொண்டு வரவிரும்புகிறேன். அதன் முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. ஆனால், மத்தியில் ஏற்படும் மக்களாட்சி ஆட்சி தற்போதைய ஆட்சி செய்துள்ள நல்ல காரியங்களை ஒதுக்கி வைக்காத அரசாக இருக்கவேண்டும் என்பது முக்கியம்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வர்த்தகத்துறையில் உள்ள குற்றவாளிகளைக் கைது செய்யவும், அத் துறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு விஷயத்தில் பெரும் சவாலைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அதற்காகவே, பட்ஜெட்டில் 19 சதவீதம் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் பாகிஸ்தான் அதிக அக்கறை கொண்டுள்ள அதே நேரத்தில் அண்டை நாடான இந்தியாவுடன் எந்தவிதமான ஆயுதப் போட்டியையும் பாகிஸ்தான் மேற்கொள்ளாது. ஆனால், குறைந்தபட்ச தேவைக்கு ஏற்ப ஆயுதங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளப்படும்.
காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள பிரச்சினை அல்ல. இது சர்வதேசப் பிரச்சினையாகும் என்றார் முஷாரஃப்.
ஐ.ஏ.என்.எஸ்.