பாக்.-மேற்கிந்தியத் தீவுகள் முதல் கிரிக்கெட் டெஸ்ட் இன்று ஆரம்பம்
ஜார்ஜ்டவுன் (கயானா):
பாகிஸ்தானுக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் போர்டாவில் இன்று துவங்குகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஜிம்மி ஆடம்ஸும், பாகிஸ்தான் அணிக்கு மோயின் கானும் கேப்டன் பொறுப்பேற்றுள்ளனர்.
இரு அணிகளும், கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியுற்றுள்ளன. பாகிஸ்தான் அணி இலங்கையிடமும், மேற்கிந்தியத் தீவுகள் அணி தென்ஆப்பிரிக்கா மற்றும் நியுசிலாந்திடமும் தோல்வி கண்டுள்ளன.
ஆகவே, 3 டெஸ்டுகள் கொண்ட இத் தொடரை வெல்ல இரு அணிகளும் போராடும். ஏற்கெனவே, மேற்கிந்தியத் தீவுகள் உள்ளடக்கிய மூன்றுநாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் வென்றுள்ளது. அதே நேரத்தில், இறுதிப் போட்டியில்தான் பாகிஸ்தானிடம் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்றதே தவிர, தகுதிச் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.
கேப்டன் பொறுப்பிலிருந்து லாரா விலகிய பிறகு ஜிம்மி ஆடம்ஸுக்கு கேப்டன் பதவி தரப்பட்டது. அவருக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி பலவெற்றிகளைப் பெற்று வருகிறது. கடைசியாக ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இரு அணிகளிலும் வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் அணியில் அப்துர் ரசாக், சக்லைன் முஷ்டாக் ஆகியோரும், மேற்கிந்தியத்தீவுகள் அணியில் பிராங்ளின் ரோஸும் காயமடைந்துள்ளனர். இந்த டெஸ்டில் இவர்கள் விளையாடுவார்களா என்று இன்னும் இறுதி செய்யப்படவில்லை.