தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்தியாவின் 100வது கோடி குழந்தையான "ஆஷ்தா" வியாழக்கிழமை பிறந்தாள்.
டெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனயில் இந்தக் குழந்தை பிறந்தது. ஆஷ்தா என்றால் நம்பிக்கை என்று அர்த்தம்.
டாக்டர்கள் கையில் குழந்தை ஆஷ்தா
இந்தக் குழந்தையின் பிறப்பு குறித்து அறிந்தவுடன் நூற்றுக்கணக்கான பத்திரிக்கை நிருபர்களும்போட்டோகிராபர்களும் அங்கு கூடினர். சிறிது நேரம் பிளாஷ் ஒளியில் ஆஷ்தா ஒளிர்ந்தாள்.
வியாழக்கிழமை (மே 11ம் தேதி) இந்தியாவில் இந்தக் குழந்தையுடன் மேலும் 42,000 குழந்தைகள் பிறந்துள்ளன.
ஆஷ்தாவின் தந்தை அசோக் டெல்லியில் ஒரு ஆட்டோ பார்ட்ஸ் கடையில் மாதம் 2,200 ரூபாய்க்கு வேலைபார்த்து வருகிறார். என் மகள் வளர்ந்து டாக்டராவாள் என்கிறார். குழந்தையின் தாயின் பெயர் அஞ்சனா.
இப்போது இந்தியா, 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட சீனாவின் வரிசையில் சேர்ந்துள்ளது. 1952ம்ஆண்டிலேயே மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து திட்டங்களை அமலாக்கியது.அப்போது மக்கள் தொகை 360 மில்லியனாக இருந்தது. இது இப்போது 3 மடங்காகிவிட்டது.
இப்போது ஆண்டுக்கு இந்தியாவில் 15.5 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. இதே நிலை நீடித்தால் 2045ம்ஆண்டில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும்.
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1971-1981ம் ஆண்டில் 2.22 சதவீதமாக இருந்தது. இது இப்போது 1.91சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், இது சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியைவிட 2 மடங்குக்கும் அதிகமாகும்.சீனா அளவிலும் இந்தியாவைவிடப் பெரியது.