முகத்தில் தெளித்த சாரல்...
என்பவர்தான் இவ்வடிவத்தை நிர்மாணித்தார்.
இலக்கியம் எப்போது
நிறைவாக வாசிக்கவும்
அதிகமாக அசைபோடவும்
செய்கிறதோ
அப்போதுதான் அது சிறந்த இலக்கியமாக இருக்க முடியும்
Basho வின் அழகிய ஹைகூ -
"என் வழி -
யாரும் பாதையில் இல்லை
இலையுதிர் இருள் படியும் பொழுது
Basho வைப் பொறுத்தவரை இது உண்மை-
மனத் தயாரிப்பில்லை
நாம் எப்போதும் பழகிய பாதையையே தேர்ந்தெடுக்கிறோம்
பழைய பாதை பாதுகாப்பானது
ஆபத்தில்லாதது
அதிலும் இன்னும் சிலர்
நடமாடினால் அதிக பாதுகாப்பு.
பயம் இருக்கும் வரை பாதுகாப்பிருக்காது -
யாரேனும் ஏற்கனவே செய்ததைச் செய்தால்
எந்தத் தொல்லையும் இல்லை
எந்தக் கேள்வி வந்தாலும்
ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதைக் காரணம் காட்டித் தப்பிக்கலாம்
நாம் தெரிந்தவற்றையே பேசிவருகிறோம்-
செய்தவற்றையே செய்து வருகிறோம்-
சாப்பிட்டவற்றையே சாப்பிட்டு வருகிறோம்
மனிதனுக்கு சதுரத்தினும் வட்டம் அதிகம் பிடிக்கிறது-
உலகம் உருண்டையாயிருப்பது வெறும் இருத்தலால் மட்டுமல்ல.
திரும்பத் திரும்ப சுழற்சியில் வருகிற பருவங்களையும், நிகழ்வுகளையும்
குறிக்கும் குறியீடு தட்டையாயிருப்பதிலும்
கோளமாயிருப்பதில் தெறித்து விழுகிறது.
மனித வாழ்க்கை கீறல் விழுந்த இசைத்தட்டு
பாதுகாப்பும் சுவாரஸ்யமும் இரு துருவங்கள்.
வாழ்க்கை சுவாரஸ்யமாயிருப்பது எதிர்பாராத திருப்பங்களால்
அடுத்த நிமிட நிகழ்வு
இந்த நிமிடம் வரை அந்நியமாயிருப்பதால் தான்
உலகில் மகிழ்ச்சியும், ஆனந்தமும்
உலவுகிறது.
யாருமற்ற பாதையைத் தேர்ந்தெடுப்பது எனின்
பாதையே இல்லாத பாதையைத் தேர்ந்தெடுப்பது-
நாமே புதிதாகப் பாதை போடுவது
நம் பஞ்சுப் பாதங்களைக் கொண்டு
கற்களையும், முட்களையும் தாண்டிப்
பாதையிடுவதற்குத் தேவை
மனதிடம்
"மனதிடம் தான் அனைத்து வேறுபாடுகளுக்கும் காரணம்-
அதன் அடர்த்தி
கால்களின் வழியாக இறங்கும்போதுதான் சிலருக்கு
சிகரங்களும் சாத்தியமாகிறது-
சிலருக்கோ பள்ளத்தாக்குதான் பாதுகாப்பானது.
யாரும் போகாத பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது
அங்கே பயங்கரமான விலங்குகள் இருக்குமே
எனும் பயம் எழலாம்-
யாருமே இதுவரை போகாத காரணத்தால்
அங்கு இருக்கும் பழங்கள்
பறிக்கப்படாமல் இருக்கலாம்-
அங்கிருக்கும் வைரம்
வெட்டி எடுக்கப்படாமல் இருக்கலாம்-
இதுவரை நாம் பார்க்காத பறவைகளின்
சங்கீத ஒலி நம் செவிகளில் விழலாம்.
படுக்கையில் நிகழும் மரணத்தைக் காட்டிலும்
பாதையில் நிகழும் மரணம் உன்னதமானது.
கருவறைக்குள் நிகழ்கின்ற மரணத்தினும்
மகப்பேறின் போது நிகழும் மரணம் மகத்தானது.
ஏனெனின் போராட்டமாவது நிகழ்ந்திருக்கிறது.
Basho உண்மையானவர்
தான் அனுபவித்தறியாததை சுகமான சொற்களுக்குள்
சொடுக்கிப் போடுபவரல்லர்.
அவர் கவிதை வாழ்வு தெறித்து விழுந்த விதைகள்.
அவை நல்ல நிலத்தில் விழும் போது முளைத்து விருட்சமாகின்றன.
அதனால் தான்
அதுவரை இல்லாத
ஹைகூ வடிவம் அவரால் கையாளப்பட்டது.
நாம் யோசித்திருக்கிறோமா?
இந்தப் பாதை யாரேனும் ஒருவரால்
முதல்முதலாக அறியப்பட்டிருக்க வேண்டும்
அவர்கள் பாதங்கள் ரத்தத்தில் தோய்ந்திருக்க வேண்டும்.
"யாரும் பாதையில் இல்லை
என Basho சொல்வது-
விரக்தியினால் அல்ல-
திருப்தியினால்.
யாருமில்லாத பயணத்தில் நாம் நம்மைத் தொலைக்கிற
தொல்லைகள் ஏதுமில்லை-
நம்மை முழுமையாக நிறைக்கும்
அனுபவத்தில்
நம் ஒவ்வொரு அடியும்
ஆழ்ந்த உள்ளுணர்வில் படியும்.
தனிமை விழிப்புணர்வைக் கற்றுத் தருகிறது
தனிமை சுயப் பரிசோதனையை சொல்லித் தருகிறது-
மோசமான
துணையைக் காட்டிலும்
அமைதியான தனிமை அழகானது - ஆனந்தமானது
பேச்சுத் துணையுடன் போகும்போது
வண்டுகளின் ரீங்காரமும்-
பறவைகளின் இசையும்,
மலர்களின் மணமும் தவறவிடப்படுகிறது
அதனால் தானோ
என்று யோசிக்கும் போது
அடுத்த வரி Basho விடமிருந்து வருகிறது
இலையுதிர் இருள் படியும்போது
இலையுதிர் காலத்தில் மலர்களும் இல்லை-
மணமும் இல்லை
வசந்தத்தில் பாடும் பறவைகளும் இல்லை-
படர்ந்திருக்கும் பனியில்
உயிரினங்களின் நடமாட்டமும் இல்லை
"யாருமே இல்லை
என்கிற Basho வின் திருப்தி கருணையினால்
காரணம்
அவர் இந்தப் பாதுகாப்பின்மையை
பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை
நாம்
ஆபத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்-
வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்-
பாதுகாப்பின்மையை பிரித்துக் கொள்கிறோம்.
சுகத்தை மட்டுமே நமக்குள்ளேயே
அடைகாத்துக் கொள்கிறோம்-
யாருக்கும் தெரிவிக்காமல்
இருளிலும், இலையுதிரிலும்
வாழ்க்கை பயங்கரமாகப் பல்லைக்காட்டி
பயமுறுத்தும்போது
எதிர்கொள்கிறவர்கள்
அந்த நொடியிலே மட்டும் வாழும் திராணியுடையவர்கள்
அவர்கள்
செல்கிற தடமெல்லாம் பாதையாகிறது-
போகிற வழியெல்லாம் பொய்கையாகிறது-
விடுகிற மூச்செல்லாம் தென்றலாகிறது.