தமிழகத்தில் இன்று
விவசாயிகளை ஏமாற்றுவதே முதல்வரின் ஒரே வேலை - சொல்கிறார் ஜெயலலிதா
சென்னை:
விவசாயிகளை ஏமாற்றுவதுதான் தனதுமுழு நேரப் பணி என்பதை கருணாநிதி மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிகார மமதைப் பேயாக மாறி முன்னுக்கு பின் முரணாக உளறி விவசாயிகளின் வயிற்றெரிச்சலை கருணாநிதி கொட்டிக் கொள்கிறார்.
பிழி திறனைப் பொறுத்து கரும்புக்கு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். கருணாநிதியின் இந்த அறிவிப்பால் விவசாயிகளுக்குஎள்ளளவும் நன்மை இல்லை. இது ஒரு மோசடி அறிவிப்பாகும்.
தமிழ்நாட்டு விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே கரும்பை விளைவிக்கின்றனர். கரும்புக்கு உரிய நேரத்தில் "கட்டிங் ஆர்டர் (வெட்டும்உத்தரவு) கொடுக்கப்பட்டு உடனுக்குடன் அரைக்கப்படுவதில்லை.
விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதில் கருணாநிதி செய்யும் குளறுபடியால் கரும்பு உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் தணணீர் இன்றி செத்து மடியும் அவலநிலைமை நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் விளையும் கரும்புக்கு 8.5 முதல் 9 சதவீதம் வரை தான் பிழி திறன் உள்ளது.
கருணாநிதி அறிவிப்பின்படி 10 சதவீத பிழி திறன் உள்ள கரும்புக்கு தமிழக விவசாயிகள் எங்கே போவார்கள்? எங்கோ உள்ள ஒரு சில ஆலை விவசாயிகள்பயன்படவும், ஒட்டுமொத்தக் கரும்பு விவசாயிகள் ஏமாற்றப்படவும் கருணாநிதி செய்த அறிவிப்பு காரணமாக அமைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இதே கருணாநிதி என்ன சொன்னார்? கரும்பு விலை, கரும்பின் பிழி திறனை பொறுத்துத்தான் நிர்ணயம் செய்யப்படும். தமிழ்நாட்டில்சுமார் 8 சதவீத அளவிற்கு தான் பிழி திறன் இருக்கிறது. பிற மாநிலங்களில் பிழி திறன் 9 முதல் 10 சதவீதம் வரை உள்ளது என்று கருணாநிதி முழங்கினார்.
இப்போது தமிழ்நாட்டில் விளையும் 10 சதவீத பிழி திறன் கொண்ட கரும்புக்கு மட்டும் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் அளிப்பதாக கருணாநிதி அறிவிப்பது உலகமகா மோசடி அல்லவா? விவசாயிகள் என்ன ஏமாந்தவர்களா? அவர்கள் தலையில் கருணாநிதி தனது மோசடி மிளகாயை அரைப்பது நியாயமா?
இந்த சில மாதங்களுக்குள் தமிழ்நாட்டின் மண் வளத்தைக் கருணாநிதி மேம்படுத்தி விட்டாரா? இல்லை விவசாயிகளை ஏமாற்றுவது தான் தன் முழு நேரமுதல்வர் பணி என்பதை கருணாநிதி மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாரா? என்று தெரியவில்லை. கொடுக்காதவன் சினை ஆட்டைப் பிடித்துக் காட்டியதாகக்கிராமத்தில் சொல்வார்கள். அதே வேலையைத்தான் கருணாநிதி செய்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்.
தமிழ்நாட்டு விவசாயிகளை வித்தியாசப்படுத்திப் பார்க்கும் அறிவிப்பை கருணாநிதி உடனடியாக கை விட்டு விட்டு, தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி செய்யும் அனைத்துவிவசாயிகளுக்கும் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் பாக்கி வைத்திருக்கிற 300 கோடி ரூபாயை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வதை விட்டு விட்டு வெற்றுஅறிவிப்புகள் செய்து விளம்பரம் தேடும் கருணாநிதிக்கு என் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications