தமிழகத்தில் இன்று
போலீஸ்காரர்கள் போல் நடித்த வாட்ச்மேன்கள் கைது
சென்னை:
போலீஸ்காரர்களைப் போல் வாகனச் சோதனையில் ஈடுபட்ட இரண்டு வாட்ச்மேன்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெரம்பூர் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்த பாஸ்கர் (48), கோடம்பாக்கம் மேற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணதாசன் (38)இருவரும் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
வர்த்தக நிறுவனங்கள், பிரபலங்கள் வீடுகளில் வாட்ச்மேன் வேலை செய்து வந்த இவர்களுக்கு போலீஸ்காரர்களைப் போல காக்கிச் சட்டை, காக்கிபேண்ட், தொப்பியுடன் சீருடை கொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் சீருடை அணிந்துகொண்டு சைதாப்பேட்டையில் ஒரு முக்கிய சாலைக்கு ஆட்டோவில் சென்று இறங்கினர்.
ஆட்டோவை அனுப்பி வைத்து விட்டு இருவரும் சாலையின் நடுவே வந்தனர். அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி போலீஸார் போல்சோதனையிட்டனர். சில பயணிகளின் பைகள், பெட்டிகளையும் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.
சந்தேகம் வந்த சிலர் அங்கிருந்த காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். உடனே மாற்று உடையில் சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர்.வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த காக்சி சீருடையை கழற்றினர். அதன் பிறகு இருவரையும்,அவர்கள் அணிந்திருந்த காக்கி நிற சீருடையையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.
காக்கி சீருடை அணிந்து போலீஸார் போல் நடிக்கும் யோசனையைக் கூறிய மற்றொரு வாட்ச்மேனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications